
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் சிவசங்கர், மதிவேந்தன் இருவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை; சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவில்லை.
தமிழக சட்டப்பேரவையில் முதலில் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் நான் எனக் கூறி சட்டமன்ற உறுப்பினராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். முதல்வரைத் தொடர்ந்து, அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களைக் கரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.