![Tamil Nadu Day Celebration; Preparations are intense on behalf of Tamil Nadu government](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q3CmaLjJsETyQQwXbNn-zbIlMw2QmXaecW5CG5WzPuk/1689649628/sites/default/files/inline-images/tamilnadu-day_0.jpg)
மெட்ராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதி, தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களில் "தமிழ்நாடு நாள்" குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்ல உள்ளனர்.
அதேபோன்று "தமிழ்நாடு நாள்" முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை, மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொண்டு தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும் தமிழ்நாடு நாள் கருத்தரங்கில் "வளர்க தமிழ்நாடு" எனும் தலைப்பில் சுப.வீரபாண்டியனும், "வாழ்க தமிழ்நாடு" எனும் தலைப்பில் முனைவர் மா.ராசேந்திரனும், "எழுக தமிழ்நாடு" எனும் தலைப்பில் ஆழி செந்தில்நாதனும் உரையாற்ற உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது.