Skip to main content

மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு; கொலையா என காவல்துறை விசாரணை

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

 

student incident police investigation in dharmapuri district



தர்மபுரி அருகே வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச்சென்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள பழையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் மோனிகாஸ்ரீ (வயது 16). சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

 

சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வில் மோனிகாஸ்ரீ சுமாரான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் நன்றாகப் படிக்கும் படி அவருடைய பெற்றோர் அடிக்கடி அறிவுரை கூறி வந்துள்ளனர். 

 

இதனால் விரக்தியடைந்த அவர், நவ. 14 ஆம் தேதி திடீரென்று பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். உடன் படிக்கும் தோழிகள், உறவினர்களிடம் விசாரித்தனர். ஆனாலும் மகள் சென்ற இடம் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. 

 

இந்நிலையில், ஆத்துக்காடு பகுதியில் உள்ள காவிரி ஆறு அருகே மோனிகாஸ்ரீ அணிந்து சென்ற காலணிகள் கிடந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை காவல்நிலைய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் காவிரி ஆற்றங்கரையோரம் மோனிகாஸ்ரீயை தீவிரமாகத் தேடினர். இந்நிலையில், காவிரி ஆற்றங்கரையோரம் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

 

சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரும்பாலை காவல்துறையினர், மோனிகாஸ்ரீ குளிக்கச் சென்ற போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தாரா? மர்ம நபர்கள் அவரைக் கொலை செய்து விட்டு சடலத்தை வீசிச் சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

வீட்டிலிருந்து மாயமான பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பழையூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்