Skip to main content

பிணம் தின்னும் கழுகுகள் போல எல்லாவற்றிலும் ’கமிஷன்’ பார்க்கும் எடப்பாடி அரசு - ஸ்டாலின்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
ps

 

கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு விற்பதா?- என்று      எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் - கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! தெரிவித்துள்ளார்.  இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

 

’’சிறந்த சுவையுள்ள சிறுவாணித் தண்ணீரை அருந்தும் நல்ல வாய்ப்பு கோயம்புத்தூர் மாநகர மக்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. தற்போது கோவை மாநகரக் குடிநீர் வழங்கலை நிறைவு செய்யும் பொறுப்பை பன்னாட்டுத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திடவும், அடிப்படைத் தேவைகளில் அதிமுக்கியமான குடிநீரைத் தனியாருக்குத் தாரைவார்த்து அவர்கள் இலாபம் ஈட்டிட வழி ஏற்படுத்திக் கொடுக்கவும், குடிநீர் வழங்கலை வணிகமயமாக்கிடவுமான வெகுமக்கள் விரோதத் திட்டம் செயல்படவிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

​பிரான்ஸ் நாட்டின் சுயஸ் என்ற நிறுவனத்திற்கு கோவைக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை, கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 150 கோடிக்கு, தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு தாராளமாக வழங்கியிருக்கிறது. இதனை அந்த பிரான்ஸ் நாட்டின் சுயஸ் நிறுவனம் பெருமையுடன் தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

டெல்லி மாநிலத்தின் மாளவியா மாவட்டத்தைத் தொடர்ந்து, குடிநீர் வழங்கிட, இந்தியாவில் இரண்டாவது பெரிய உரிமத்தைப் பெற்றிருக்கிறோம் என்று அந்த தனியார் நிறுவனம் மார் தட்டிக்கொள்கிறது. இனி எதிர்காலத்தில், கோவை மாநகர மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு இந்தத் தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் அபாயம் உள்ளது.

 

 இதற்கு முன், பொலிவியா நாட்டில் கொச்சபம்பா நகரில் செமப்பா என்ற தனியார் நிறுவனத்திடமும் அதன்பிறகு இந்த சுயஸ் நிறுவனத்திடமும் குடிநீர் வழங்கிட உரிமம் வழங்கப்பட்டபோது, கட்டணம் செலுத்தினால் மட்டுமே குடிநீருக்கான அட்டை வழங்கப்பட்டு, அதனை இயந்திரத்தில் செருகினால்தான் தண்ணீர் பெற முடியும் என்ற சிக்கலான நிலை உருவானது. 

 

காசு இல்லாதவர்களுக்கு தாகம் தீர்த்துக் கொள்ள சொட்டுத் தண்ணீர்கூட கிடையாது என்ற நிலைமையும் ஏற்பட்டது என்கிறார்கள் சர்வதேச அளவிலான இயற்கை ஆர்வலர்கள்.

 

​ அதுமட்டுமின்றி, ஆற்று நீர், ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் நீர் இவற்றைக்கூட பயன்படுத்துவதற்கு சுயஸ் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடி உருவானது. மழை நீரை பயன்படுத்தக்கூட கெடுபிடிகள் காட்டப்பட்டதால், மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்து, பொலிவியா நாட்டைவிட்டு சுயஸ் நிறுவனம் விரட்டப்பட்ட நிகழ்வையும், அந்த நிறுவனத்தின் மிக மோசமான பின்னணியை அறிந்த இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

​ தரமற்ற அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு, அ.தி.மு.க. அரசு கோவை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் உரிமத்தை மாநகரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு விற்றிருக்கிறது.

 குடிநீர் உரிமம் பெற்றுள்ளதை அந்த நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து மக்கள் விரோத அ.தி.மு.க. அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

​மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை. அதனால்தான், தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, ஃபுளூரைடு பாதிப்பிற்குள்ளான தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக, ஜப்பான் நாட்டுக்கு நேரில் சென்று அவர்களின் நிதியுதவியைப் பெற்று, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்தி, பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்தோம்.

 

​அதுபோலவே, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு போர்க்கால அடிப்படையில் மிகவேகமாகச் செயல்படுத்தியது. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கிருஷ்ணா நதி நீரை விரைந்து பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் தி.மு.கழக அரசும், அன்றைய சென்னை மாநகரின் மேயராக இருந்த முறையில் நானும் தொடர்ந்து ஈடுபட்டதன் காரணமாக, அந்தத் திட்டங்கள் நிறைவேறின.

 

​மக்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காத அ.தி.மு.க. அரசு, கோவை மாநகரத்தில் உள்ள ஏறத்தாழ 17 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவைக்கான உரிமத்தை, மோசமான முன்னுதாரணங்கள் படைத்த ஒரு தனியார் நிறுவனத்திடம் அளித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, கோவை மக்களுக்கு இந்த அரசு செய்யும் துரோகமாகும். பிணம் தின்னும் கழுகுகள் போல எல்லாவற்றிலும் "கமிஷன்" பார்க்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, மக்களின் அடிப்படை உரிமையான குடிநீரிலும் சுயலாபம் சுருட்டக் கருதிச் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் மறக்க மாட்டார்கள்” - திமுக காட்டம்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், “எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார். எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஒரு தந்தை கண் எதிரே அவர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள். இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதலமைச்சர் இப்படிக் கூறியது நியாயமா?. அந்தக் கொடிய துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே அவருக்குத் தெரியும் என்று கூறி, பழனிசாமியின் பொய்முகத்தை வெளிப்படுத்தியது.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள் :

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழித்து கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி.

நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி : 

அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்குக் காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட்தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவரும் பழனிசாமிதானே.

உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே :

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை இல்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து, வங்கியில் வாங்கிய கடன்களைச் செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைந்த பின் உதய மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால், மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஏற்று அதன் நிதிச்சுமை தமிழ்நாடு அரசின் மேல் விழுந்தது. இதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனிசாமியை பாதம் தாங்கிப் பழனிசாமி என்று கூறுகிறார்.

இன்னும் ஒரு வேடிக்கை :

பழனிசாமி சொல்கிறார் நான் என் உழைப்பால்தான் முதலமைச்சர் பதவிக்கு உழைத்து முன்னுக்கு வந்தேன் என்று. பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை ஊரும், உலகமும் தொலைக்காட்சியில் பார்த்துக் கைகொட்டி சிரித்ததே. அவர் மண்புழு போல தரையில் ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனதுடன், யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவருக்கே துரோகம் செய்தவர் அல்லவா பழனிசாமி. அது மட்டும் அல்ல கொடநாடு கோட்டைக்குள் புகுந்து காவலரைக் கொன்று அங்கிருந்த ஊழல் பண மூட்டைகளைக் கொள்ளையடித்த கும்பல், எங்களை ஏவியது பழனிசாமிதான் என்று காவல்துறையிடம் கூறி பழனிசாமியின் பொய்முகத்தைத் தோலுரித்துக் காட்டியதை மறக்க முடியுமா? உறவினர்களுக்கு அரசு டெண்டர் எதுவும் வழங்கக்கூடாது எனும் விதிகளுக்கு மாறாக, தன்னுடைய சம்பந்திக்கு அரசுப் பணிகளை டெண்டர் மூலம் வாரி வழங்கி ஊழல் செய்தவர் பழனிச்சாமி என்பதை அவர் மறுக்க முடியுமா?.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிச்சாமி : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பா.ஜ.க.அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அ.தி.மு.க.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி :

எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடம் :

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டைக் கடைசி இடத்திற்குத் தள்ளியது இந்த பழனிசாமி ஆட்சிதானே.

ஒரே நாடு ஒரே தேர்தல் : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறியதைக் கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பா.ஜ.க. அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே. இப்படித் தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பா.ஜ.கவிடம் கூட்டணி இல்லை என்று கூறி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.