Skip to main content

'அந்த வேதனைதான் என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது' -ஸ்டாலின் 

Published on 13/01/2019 | Edited on 13/01/2019

 

d


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  இன்று (13.1.2019) அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது ஸ்டாலின்,   ‘ஸ்டாலின் துணை முதல்வராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்குச் சென்றாரா என்று ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டிருக்கிறார் எடப்பாடி.  அமைச்சராக, துணை முதலமைச்சராக நான் செய்த சாதனைகளை எடப்பாடி அறிய மாட்டார்.

 

அவருக்கு எனது பதில் இதோ!   2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தியது நாங்கள்தான். பல ஆண்டுகளாக 4 ஊராட்சிகளுக்கு தேர்தலே நடத்தப்படாத நிலை இருந்தது.  பாப்பாரம்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் கொட்டக்கச்சியேந்தல் கிராமத்துக்கும் 2006ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த மக்களிடத்தில் பேசி ஒரு சுமுகமான சூழ்நிலை ஏற்படுத்தி சுமுகமாக தேர்தலை நடத்திய பெருமை, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதுதான்.

 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க நிதி ஆதாரத்தைப் பெருக்க அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த என் தலைமையில்தான் குழு அமைக்கப்பட்டது. ஊராட்சிகளுக்கு அதிகாரம் மற்றும் நிதி வழங்கும் 99 பரிந்துரைகளை அளித்து தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றினோம்.

 

தல வரியையும், தலமேல் வரியையும் முழுமையாக, நாள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ரத்து செய்தேன்.   குட்டை பராமரிப்புப் பணியை கிராம ஊராட்சிகளுக்கு வழங்கினோம்.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தரப்படும் நிதியை அதிகப்படுத்திக் கொடுத்தோம்.  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 - உள்ளாட்சிகள் தின விழா கொண்டாட வேண்டும் என அறிவித்துக் கொண்டாடினோம்.

 

கிராமங்களில் எல்லா மதம், சாதியைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக, தந்தை பெரியார் பெயரில் “சமத்துவபுரங்கள்” உருவாக்கினோம்.

 

ஊரகப் பகுதிகளில் “நமக்கு நாமே” திட்டத்தை ஏற்படுத்தித் தந்தோம்.  “அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்” எனும் ஒரு அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்த ஒவ்வொரு ஆண்டும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களின் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் விருப்பத்துக்கேற்ப ஒரு ஊராட்சியைத் தேர்ந்தெடுத்து, அந்த ஊராட்சியின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய நிலையிலே 20 லட்ச ரூபாய், அந்தத் திட்டத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் துறையின் சார்பில் வழங்கினோம்.   மற்ற துறைகளெல்லாம் சேர்த்து, ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வழங்கி, பல திட்டங்களை நாம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.  அதுபோல் “கலைஞர்  வீடு வழங்கும் திட்டம்” எனும் பெயரில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தோம்.  அதுமட்டுமில்லை,

 

ஒரு மிகப்பெரிய சாதனையாக தமிழகத்தில் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகள் உள்ளன.  அத்தனை ஊராட்சிகளிலும் நூல் நிலையங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

2006ஆம் ஆண்டு 29 ஆயிரம் கிலோ மீட்டர் ஊரகச் சாலைகளை 54 ஆயிரம் கிலோ மீட்டர் ஊரகச் சாலைகளாக அதிகரித்து கொடுத்திருக்கிறோம்.  மகளிர் சுயஉதவிக் குழுவினரைப் பொறுத்தவரை நான் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த நேரத்தில், 6364 கோடி ரூபாய் சுழல் நிதி, வங்கிக் கடன், மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டது.  அதுமட்டுமில்லை, ஒவ்வொரு மாவட்டமும் நானே நேரடியாகச் சென்று அந்த திட்ட உதவிகளை நானே வழங்கியது மறக்க முடியாத ஒன்று.

 

அதுமட்டுமல்ல, தண்ணீர் தாகத்தைத் தீர்த்து வைப்பதுதான் முக்கியமான பிரச்சினை, தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 616 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.
அதேபோல, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க, ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர்த்திட்டம், இப்படிப் பல திட்டங்கள் கொண்டு வந்தோம்.


இன்னும் சொல்ல வேண்டுமேயானால் - மீஞ்சூரில், நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.  இப்படி பல திட்டங்களை என்னால் அடுக்கிக் காட்ட முடியும்.  இந்தத் திட்டங்களை எல்லாம் சொல்லும்போது, அவை என் பெயரைச் சொல்லும்.   ஆனால் இன்று கொலைகள் - கொள்ளைகள் - வழிப்பறிகள் - கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் இவற்றைக் குறிப்பிட்டால், அவை எடப்பாடியின் பெயரைத்தான் சொல்லணும்.  அதுதான் இன்று இருக்கக்கூடிய நிலை.

 

அதுமட்டுமில்லை, இன்னொன்றைத் தொடர்ந்து திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.   அதாவது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு, தி.மு.க. வழக்கு போட்டதுதான் காரணம் என்று சொல்கிறார்கள்.  தி.மு.க. வழக்குப் போட்டது உண்மை.  ஆனால், தேர்தலை நிறுத்த வேண்டும் என தி.மு.க. வழக்குப் போடவில்லை.  தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் எங்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குப் போட்டது உண்மை.   அதில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்க வேண்டும் எனக் கோரினோம்.  முக்கியமாக, இடஒதுக்கீடு என்னென்ன சமுதாயத்திற்கு எவ்வளவு இருக்க வேண்டும் என இருக்கிறது.

 

குறிப்பாக - சென்னையைப் பொறுத்தவரை, மலைவாழ் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என இருக்கிறது. அப்படி ஒதுக்காமல், வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நடத்த முயற்சித்தார்கள்.  அந்த நேரத்தில்தான், இதனை முறைப்படுத்த வேண்டும் என நாங்கள் நீதிமன்றம் போனோம்.  நீதிமன்றம், “இதை முறைப்படுத்தி தேர்தலை நடத்துங்கள்” என உத்தரவு போட்டது.  தி.மு.க.தான் நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் நிறுத்தியது எனும் குற்றச்சாட்டை ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்.  2017 மே மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. நடத்தினார்களா? இல்லை.

அதற்குப்பிறகு, 2017 - நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு போட்டது.  அப்போதும் தேர்தலை நடத்தவில்லை.    அதுமட்டுமல்ல, உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையரை கூப்பிட்டு, “உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்! நீங்கள் சிறைக்குப் போக வேண்டிய சூழ்நிலை கூட வரும்” என்று உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு போட்டது.  அதற்கும் இந்த ஆட்சியாளர்கள் பயப்படவில்லை.

 

இப்போது, கடந்த 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்துவோம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அரசு நீதிமன்றத்தில் கூறியது.  இதைச் சொல்லி 6 மாதங்கள் ஆகிறது.  ஆனால் இதுவரை இந்த ஆட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.  இது யாருடைய தவறு? என் தவறா? முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தவறா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  நான் முதலமைச்சர் இல்லை.  தேர்தல் ஆணையம் எனது கட்டுப்பாட்டிலா இருக்கிறது? இந்த அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.   ஆகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு யார் காரணம் என்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.    அடுத்து இன்னொரு முக்கியமான செய்தி.  முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்கு இணையானது, ஊட்டியில் இருக்கக்கூடிய கொடநாடு பங்களா!

 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்திலும், சரி அவர் மறைந்த பிறகும் சரி, கொடநாடு பங்களாவில் மர்மமான மரணங்கள், திருட்டுக்கள், கொள்ளைகள், கொலைகள், தற்கொலைகள், விபத்துக்கள் தொடர்ந்து நடந்திருக்கிறது. அதில் குறிப்பாக, கொடநாடு பங்களாவில் பணிபுரியும் காவலாளி ராவ் பகதூர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆப்பரேட்டராக இருந்த தினேஷ்குமார், தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்.

ஜெயலலிதா கார் டிரைவராக இருந்த கனகராஜ், சாலை விபத்தில் பலியாகியிருக்கிறார். கனகராஜால் கொள்ளை அடிக்க நியமிக்கப்பட்டிருக்கும் சயன் என்பவரின் மகளும், மனைவியும் சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள்.

 

இந்த தற்கொலை, கொலை விபத்துகளுக்கு பின்னணி யார் என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கின்றது.  அதனைத் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் அவர்கள் விசாரணை நடத்தினார். சி.டி. தயாரித்து அதனை நேற்று முன்தினம் புதுடெல்லியில் வெளியிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, சயன் என்பவரும், வலையார் மனோஜ் என்பவரும் நேற்றும் சொல்லி இருக்கிறார்கள். நேற்று முன்தினமும் சொல்லி இருக்கிறார் கள். பேட்டியும் கொடுத்து இருக்கிறார்கள்.   இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி சொல்லிதான் நாங்கள் செய்தோம். அப்படின்னு மேத்யூ சொல்கிறார்.

நேற்று எடப்பாடி பத்திரிகை யாளர் களை சந்தித்து இருக்கிறார். மேத்யூ கூறியதைப் பற்றி எடப்பாடி யால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை! பதில் சொல்ல வில்லை! எடப்பாடி பதி லைப் பார்த்தால், இந்த விவகாரத் தில் முழு குற்றவாளி அவர்தான் என்பது மிக தெளிவாகத் தெரி கின்றது.

 

கனகராஜ் என்பவரை எனக்குத் தெரியாது என்று சொல்லவில்லை. சயன் என்பவரையும் எனக்குத் தெரியாது என்று சொல்லவில்லை.

2000 கோடி ரூபாய் பணம் கொட நாட்டில் இல்லை என்றும் சொல்லவில்லை. 5 கோடி ரூபாய் பேரம் பேசப்படவில்லை என்றும் சொல்லவில்லை.

 

கனகராஜ் மரணம் விபத்துதான் என்றும் சொல்லவில்லை.  சயனின் மனைவியும் மகளும் சாலை விபத்தில் தான் இறந்தார்கள் என்றும் சொல்ல வில்லை,

தினேஷ்குமார் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் சொல்லவில்லை.

கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்தது என்று  எடப்பாடி சொல்லவில்லை - எந்த பதிலும்  சொல்லாமல், அவர் சொன்னது வழக்கு நடக்குது அதையும் தாண்டி அரசியல் சதி என்று  ஒரு பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கிறார்.

இன்றைக்கு அவர் பேட்டி தரும்போது பார்த்தால் தெரியும், அவருடைய முகம் எப்படி இருண்டு போய் இருக்கிறது. அவரால் பேசவே முடியவில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது.


    நான் கேட்கிறேன். கொலையை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று அவரால் சொல்ல முடியுமா?   இந்தப் புகாரை விசாரிக்க நீதி விசாரணை அமைக்கப்படும் என்று அவரால் சொல்ல முடியுமா?  இந்த 5 பேர் மரணம் கொலைதான் என்றும். இதில் எடப்பாடி சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் பகிரங்கமாக  மேத்யூஸ் சொல்லி   இருக்கிறார். உடனே சொன்னவர்மீது வழக்கு போடுகிறார் என்றால் ஏன் பயம்?


நடந்தது விபத்துதான் என்று முதல்வர் நிரூபிக்க வேண்டும். இது வரையில் நடந்த விசாரணைகளையும், வாக்குமூலத்தையும் மக்களுக்கு தெரியப்படுத்தட்டும், அதற்கு எடப்பாடி தயாராக இருக்கிறாரா?

சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்க முடியாத சூழ்நிலையில் இன்றைக்கு சி.பி.ஐ. இருக்கு! திக்கு முக்காடிக்கிட்டு இருக்கு!  அதனால் சிறப்பு விசாரணை ஒன்றை மத்திய அரசு உடனே அமைத்து, அமைப்பது மட்டுமல்ல, அதனை, சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் - கண்காணிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த விசாரணை ஆணையம், எடப்பாடியை எதிர்த்தல்ல, இன்றைய அமைச்சர்கள், சசிகலாவின் குடும்பத்தினர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும், அதுதான் நல்லது.

 

   கொட நாடு பங்களாவில் இருந்ததாக சொல்லப்படுகின்ற 2000 கோடி ரூபாய் எங்கே? என்று நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.    இந்திய வரலாற்றிலேயே ஒரு கொலை குற்றவாளி முதல மைச்சராக இருப்பது தமிழ்நாட்டில் தான் என்று நான் சொல்லவில்லை; பத்திரிகையாளர் மேத்யூஸ் சொல்லி இருக்கிறார்.  இதைவிட கேவலம். இதைவிட அசிங்கம் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக இருக்க முடியாது.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கை என்னவென்று கேட்டால், எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைத்திட வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில், இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும். முதல்வரை அழைத்து குடியரசுத் தலைவரும், ஆளுநரும் இதற்கு விளக்கம் கேட்க வேண்டும்.

மேத்யூ, சயன், வலையார் மனோஜ் ஆகியோருக்கும், அவர் களுடைய குடும்பத்தாருக்கும் மத்திய அரசு உரிய வகையில் பாதுகாப்பு அளித்திட வேண்டும்.

குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை தி.மு.கழகம் கொண்டு செல்ல இருக்கின்றது.

 

நாளை கவர்னரிடம் நேரம் கேட்டு இருக்கிறோம். நாளை தந்தால் இந்த விஷயத்தை அவரிடம் தெளிவாக எடுத்துச் சொல்வோம். இந்தப் பிரச் சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயமாக சொல் கிறேன், தி.மு.கழகத்தின் சார்பில் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.

 

முறையான விசாரணை செய்யப்பட்டு, ஒருவேளை முதல்வர் அவர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக தி.மு.கழகம் மகிழ்ச்சி யடையும்,

ஏனென்றால், தமிழக முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு,  உயர் மனிதர்கள் வகித்த பதவியில்  முதல்வராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய ஒருவர் கொலை, கொள்ளை என்ற நிலை வருகின்றபோது தமிழகத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவாக வந்துவிடும். அதனை நினைத்துதான் தி.மு. கழகம் வருத்தப்படுகிறது. எனவே தி.மு.கழகம் தனது ஜனநாயகக் கடமையாக இதனைக் கருதி இந்தப் பிரச்சினையின் உண் மையை மக்களுக்கு தெரியப் படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத் தோடு மட்டும்தான் சொல்லப்படுகிறது என்று நான் ஊடகம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இதனைவிட கொடுமை என்ன வென்றால் அப்பவே - மருத்துவ மனையில் நடந்ததை விட, கொட நாட்டில் நடந்திருக்கிறதை விட எனக்கு அதிர்ச்சி தரக் கூடிய செய்தி எது என்று கேட்டால், இப்படி ஒரு செய்தி நேற்று முன்தினம் வெளியாகி இருக்க, ஆனால் தமிழக டி.வி. சேனல்கள் பெரும்பாலும், இதனை வெளியிட வில்லையே என்கிற அந்த வேதனைதான் என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

 

நான் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அறிக்கை கொடுத்தேன்.

பாரம்பரியமிக்க பத்திரிகைகள்கூட அதனை வெளியிட வில்லை என்பது உள்ளபடியே வெட்கப்பட வேண்டிய ஒன்று, இதுதான் பத்திரிகை தர்மமா? ஊடக தர்மமா? என்ற கேள்வியைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்.

ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை, பேட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் குரல்கள், அந்த அறிக்கைகள் எல்லாம் வெளியிடப் படாததற்கு  என்ன காரணம்? தமிழ் நாட்டில்  பத்திரிகை, ஊடக நிறுவனங்கள் இருக்கின்றன. காரணம் அந்த அளவிற்கு ஊடகங்கள் எல்லாம் மிரட்டப்படுகின்றது. இதுதான் உண்மை!

 

மேத்யூ பேட்டியில் சந்தேகம் இருந்தால் என்ன செய்து இருக்க வேண்டும், அவரிடம் கேள்வியாக கேளுங்கள், மனைவியையும், மகனையும் இழந்து சயன் என்பவர்,  மனிதராக உங்களுக்குத் தெரியவில்லையா? இந்த நாட்டில் எல்லா ஊடகங்களும் இன்றைக்கு எடப்பாடிதான் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார் என்பது தெரிகின்றது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதவி விலகினால், கைது  செய்யப் பட்டால் அந்த செய்தியையாவது நீங்கள் போடுவீர்களா ? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு இருக்கு! ஆகவே நான் ஊடகங்களை நோக்கி நான் கேட்கின்ற கேள்வி,  இது பத்திரிகை தர்மமா? என்ற கேள்வியைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்!

ஆகவே இந்தப் பத்திரிகைகள் எல்லாம் மிரட்டப்பட்டு, இந்த செய்திகள் எல்லாம் வெளியிட முடியாத அளவிற்கு இந்த ஆட்சி செய்கிறது என்றால்,  “எங்கப்பன், குதிருக்குள் இல்லை” என்பதை அவரே இன்றைக்கு வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை! ஆகவே இந்தச் செய்தியையாவது நீங்கள் போடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் என்னுடைய இந்த விளக்கத்தை முடித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்.

 


தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலும் வருமாறு:-

செய்தியாளர் :-           எடப்பாடி நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் ஒன்றரை வருடங் களாக நடக்கிறது. சயன் என்பவரும் மற்றவர்களும் 22 முறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்கள். அப்போது சொல்லாதவர்கள், இப்போது சொல்வது ஏன் என்று கேட்டு இருக் கிறாரே?

மு.க.ஸ்டாலின்:-    அதற்கு முறையான விசாரணை கமிஷன் அமையுங்கள், அப்போது உண்மை வெளி வரும். எடப்பாடியிடமே கேளுங்கள்!

 

செய்தியாளர்:-            இதில் அரசியல் பின்னணி இருக்குன்னு சொல்கிறாரே எடப்பாடி?

மு.க.ஸ்டாலின்:-    அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்; அதனால்தான், தான் தப்பித்துக் கொள்வதற்காக எதை எதையோ சொல்லிக் கொண்டு இருக்கிறார். நான் எது சொன்னாலும் நீங்கள் போடப் போவதில்லை. மேலும் நீங்கள் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டு இருக்கக் கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிகிட்டேயே நேரில் போய் கேளுங்கள்!

படம்: ஸ்டாலின்

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.