
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், ஐ.நா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றாரின் பொன்வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் சமூகம் விளங்க வேண்டும். தற்போது மாணவர்கள் சோசியல் மீடியாவை கையாளுவதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படை காரணம் தொலைபேசி தான். அதை மிகவும் கவனமான முறையில் கையாள வேண்டும். கடந்த ஆண்டு சாலை விபத்தினால் 536 நபர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். அதில் 270 நபர்கள் 23 வயதுக்கு குறைவானவர்களே. எனவே இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் கட்டாயம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.
சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் அர்ஜுனன், கல்லூரி பேராசிரியர் அறிவழகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை, துணை காவல் கண்காணிப்பாளர்கள் லாமேக், ராமதாஸ். காவல் ஆய்வாளர்கள் அம்பேத்கார், கவிதா, உதவி ஆய்வாளர்கள் மகேஷ், ஆறுமுகம் மற்றும் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.