
கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளி அவசியம் அதைப் பின்பற்றாத மக்களை நினைத்து வருத்தமாக உள்ளது. அதனால் தான் கரோனா அதிகமாகப் பரவி வருகிறது என்று தினசரி வருத்தப்பட்டே ஊடகங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
அதேபோல மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தினசரி செய்தியாளர்களைச் சந்திக்கும் போதும் முகக் கவசம் அவசியம் அணிவதுடன் சமூக இடைவெளி மிகவும் அவசியம் அப்படி இருந்தால் மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் எனறு ஒவ்வொரு நாளும் தமிழக மக்களுக்கு அறிவுரை சொல்லி முடிப்பார்.
ஆனால் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நடந்த தனது சொந்த செலவில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை போல பேசி முடித்த பிறகு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். அப்போது சமூக இடைவெளியை அனைவருமே மறந்துவிட்டனர்.
அதேபோல அடுத்து செல்லப்பா நகரில் பூங்கா திறப்பு விழாவுக்குச் சென்றார். அங்கே மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் (பொ) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டாலும் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தாலும் கூட சமூக இடைவெளியை மறந்துவிட்டிருந்தனர். அடுத்து கோவில்பட்டி பிடாரி அம்மன் கோயில் திருப்பணி தொடக்கவிழாவிலும் இப்படியே நடந்தது. சொந்த விழா முதல் அரசு விழாக்கள் வரை அனைத்து விழாக்களிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட விழாக்களில் கரோனா பரவலைத் தடுக்கும் சமூக இடைவெளியைக் காணவில்லை.

இது குறித்து நகர மக்கள் கூறும் போது, தனித்திருக்க வேண்டும், விலகி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சொல்கிறது. ஆனால் இந்த வார்த்தைகள் பரவல் தொடங்கும் முன்பு மக்களும் அதைக் கேட்டு நடந்தார்கள். ஆனால் தற்போது தான் அதிகமாகப் பரவி வருகிறது அதற்கான பாதுகாப்பு இல்லாத நிலை வந்துவிட்டது. அரசு விழாக்கள் நடத்தினால் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பது தெரியாதா? அப்பறம் எப்படி இப்படிக் கூட்டத்தைச் சேர்த்து விழா நடத்தினார்கள். பள்ளி, கல்லூரி திறந்தால், தேர்வு நடத்தினால் கரோனா பரவும் என்று சொல்லும் அரசாங்கம் இப்படிக் கூட்டம் கூட்டமாக ஒன்றாக நின்றால் கரோனா பரவும் என்பதை அறியவில்லையா?

ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் அரசு தங்கள் அமைச்சர்களுக்கும் அதை வலியுறுத்த வேண்டியது அவசியம் தானே, இப்படிக் கூட்டம் கூட்டமாகக் கூடியதால் தான் சென்னையில் ஒருத்தரை இழந்திருக்கிறோம். அதேபோல இப்படிக் கூட்டம் கூட்டி இருக்கிறீர்களே என்று வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.