தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (30/05/2022) சென்னை, நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியில் (S.I.E.T.) நடைபெற்ற விழாவில், அக்கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவால் வழங்கப்பட்ட NAAC-A++ சான்றிதழை அக்கல்லூரியின் தலைவர் மூஸா ரஸாவிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெண்களுக்கு தனிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்றுதான் நீதிபதி பஷீர் அகமது சையது S.I.E.T. கல்லூரியைத் தொடங்கினார். ஏழை, எளிய மாணவிகள் அதிகளவில் இக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். கல்வி உரிமை என்பது பெண் உரிமைக்கு கண் போன்றது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது S.I.E.T. கல்லூரி. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கென பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்.
பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சுய உதவிக்குழு திட்டம் கொண்டு வரப்பட்டது. மதச்சார்பின்மையின் மறுவுருவமாக சென்னை S.I.E.T. கல்லூரி உள்ளது. 7,500 மாணவிகள் பயிலும் கல்லூரியில் 50% இஸ்லாமியர், 50% பட்டியலின, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவிகள். இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களின் கல்விக்காக உழைக்கும் கல்லூரி இது" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் ஷானாஸ் அகமது, துணை முதல்வர் முனைவர் அம்துல் அஜீஸ், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.