Skip to main content

“டோக்கனுக்கு தலைமைல இருந்து இன்னும் க்ளியர் ஆகல..”- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ‘குரல்’ விளக்கம்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

sholavandan admk party mla expain

 

சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியின் சிட்டிங் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான மாணிக்கம் மீது பணப்பட்டுவாடா புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவானது. இந்நிலையில், அ.தி.மு.க. ஐ.டி. விங் நபர் ஒருவருடன் மாணிக்கம் எம்.எல்.ஏ. பேசியதாக ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. 

 

அதில், அந்த நபர் ‘அழகாபுரில இருந்து,  ஐ.டி. விங்க்ல இருந்து பேசுறேண்ணே.. இந்த டோக்கன் கொடுத்ததுக்கு ஆள் பூராவும் வந்து நிக்குது. சாமி கும்பிட வேண்டியது இருக்குது. எல்லாம் வந்து வீட்டுல நெருக்குறாங்க.’ என்று பதற்றத்துடன் பேச, எம்.எல்.ஏ. மாணிக்கம் குரலில் ‘டோக்கனுக்கு தலைமைல இருந்து இன்னும் க்ளியர் ஆகல தம்பி.  அவங்க முடிவு தெரிஞ்சதும்தான் செய்வாங்க. ஏன் அவசரப்படுத்துறீங்க? நாமதான் ஜெயிக்கப் போறோம். ஜெயிச்சு வந்து பார்க்கிறோம்னு சொல்லியாச்சுல.’ என்று கூல் பண்ணுகிறது.  அந்த நபரோ ‘அண்ணே 91 பெர்சன்ட் நம்மதுல வாக்குப்பதிவுண்ணே..’ என்று இடைமறிக்கிறார்.  எம்.எல்.ஏ. குரலோ ‘ஓட்டு போட்டிருக்காங்கள்ல. 100 பெர்சன்ட் நாம ரூபா வந்ததும் கொடுத்திருவோம். நாம ஜெயிச்சவுடனே, யாரு தந்தாலும், தரலன்னாலும் உங்கள வச்சிட்டு நாமளே கொடுத்திருவோம். அவங்க தரலன்னாலும் கொடுத்திருவேன்’ என்று சமாளிக்கிறது.

 

இதுகுறித்து, சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கத்தை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது, “ஆடியோ வந்ததுமே மறுப்பு சொல்லிட்டேன். அது நம்மது இல்ல. நான் உண்மையா தேர்தல் பணி செஞ்சிருக்கேன். அது நாம இல்ல. பணப்பட்டுவாடா கேஸ் இல்ல. ஆரத்திக்கு போட்டதா தி.மு.க. காரங்கதான் சொல்லிருக்காங்க. நம்மளுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல. அவங்க (தி.மு.க. தரப்பு)  கேஸ் போடணும்னு சொல்லிருக்காங்க. போட்டிருக்கங்க. அப்புறம் வேட்டு போட்டோம்னு சொல்லிருக்காங்க. 10 மணிக்கு மேல வேட்டு போட்டத எல்லாம் நான் பார்த்துக்கிட்டிருக்க முடியுமா? அம்மாவுக்கு பயந்து தேர்தல் வேலை பார்த்திருக்கேன். ஆண்டவனுக்கு பயந்து ஓட்டு கேட்டிருக்கோம். ஆண்டவன் புண்ணியத்துல ஜெயிப்பேன். எதையும் எதிர்பார்க்காம எங்க மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க. எம்.எல்.ஏ. ஆகி தொண்டு செய்வேன்.” என்றும் ‘அது என் குரலல்ல’ எனவும் மறுத்துப் பேசினார் எம்.எல்.ஏ. 

 

வாக்காளர்கள் ‘எதையும்’ எதிர்பார்க்காமல் வாக்களித்திருப்பதாகச் சொல்வதும், ‘தனது தேர்தல் பணியில் உண்மையும் நேர்மையும் மட்டுமே இருப்பதாக’ இறைபயத்தை வெளிப்படுத்துவதும், அசத்தலான அரசியலே!


   
 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.