Skip to main content

காதல் மனைவியை கொன்று காட்டில் புதைத்த கணவன்... வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

 Shocking incident in Vellore!

 

கணவனின் முறையற்ற தொடர்பைக் கண்டித்த மனைவியை காதல் கணவன் கொன்று காட்டில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வேலூர் மாவட்டம் கீ.வி.குப்பம் பகுதியை அடுத்துள்ளது வடுகந்தாங்கல். அங்கு வசித்து வந்தவர் விநாயகம். விநாயகம் அந்த பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது அதே கல்லூரியில் பயின்றுவந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுப்ரஜா என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு விநாயகம்-சுப்ரஜா தம்பதியினர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தனர். பிறகு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

 

 Shocking incident in Vellore!

 

குழந்தை பிறந்த பிறகு சொந்த ஊருக்கே வந்த விநாயகம் உள்ளூரில் கிடைக்கும் தினக்கூலி வேலைக்குச் சென்றுவந்தார். இந்நிலையில் நாளடைவில் மதுபோதைக்கு அடிமையான விநாயகம் ஒரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பிலிருந்துள்ளார். இதனை பலமுறை சுப்ரஜா கண்டித்துள்ளார். சுப்ரஜாவின் காதல் திருமணத்திற்கு பின் அவரின் அப்பா இறந்துவிட அவரது அத்தை தனலட்சுமி மட்டுமே அவருடன் செல்போன் மூலமாக பேசிவந்தார். இந்நிலையில் சில நாட்களாக சுப்ரஜாவை அத்தை தனலட்சுமியால் தொடர்புகொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த தனலட்சுமி சுப்ரஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் சுப்ரஜா இருந்ததற்கான அடையாளமே இல்லை. இதனால் கீ.வ.குப்பம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனைத்தொடர்ந்து விநாயகத்தின் வீட்டிற்கே சென்று போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

 

தொடர்ந்து தனது முறையற்ற தொடர்பைக் கண்டித்து வந்த மனைவியைக் கடந்த ஜனவரி 19 கொலை செய்யத் திட்டமிட்ட விநாயகம் முத்தினாம்பட்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுப்ரஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து கூட்டாளிகளுடன் சேர்ந்து புதைந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விநாயகத்தை அழைத்துச் சென்ற போலீசார் சுப்ரஜாவை புதைத்த இடத்தை அடையாளம் காட்ட, போலீசார் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. காதல் மனைவியை கணவனே கொன்று புதைத்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்