Skip to main content

கொரிய தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

Published on 20/01/2023 | Edited on 21/01/2023

 

Selection of new executives of Korea Tamil Sangam

 

கொரிய தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

 

திருவள்ளுவர் ஆண்டு 2054, (20 பிப்ரவரி 2023), வெள்ளிக்கிழமை. அறிவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களால் உருவாக்கப்பட்ட கொரிய தமிழ்ச் சங்கம், ஆராய்ச்சி நோக்கில் தமிழ்ப்பணி, பொதுவான மக்கள் பணி, அறிவியல், சமூகம், அரசியல் தலைமைகளுடனான உரையாடல், மற்றும் கோவிட் பெருந்தொற்றுக் கால உதவிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தமிழ்கூறும் நல்லுலகின் நன்மதிப்பை பெற்றிருக்கும் அமைப்பாகும்.

 

கொரிய தமிழ்ச் சங்கம், கொரிய வெளியுறவுத்துறை சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் சட்ட திட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட ஆளுமைக் குழுவின் பொறுப்புக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். தமிழ்ச் சமூகத்தில் புதிய தலைமைகள் உருவாவதை ஊக்குவிக்கும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய அங்கத்தினர் ஒருமுறை மட்டுமே பொறுப்பு வகிப்பது என்கிற மரபை கொரிய தமிழ்ச் சங்கம் பின்பற்றி வருகிறது.

 

அவ்வகையில், முனைவர் இராமசுந்தரம் தலைமையிலான முதல் ஆளுமைக் குழுவின் பொறுப்புக்காலம் (மார்ச் 2020 - மார்ச் 2023) நிறைவு பெறுவதால், புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமைக் குழுவினரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் கடந்த 2022 நவம்பர்-டிசம்பர் காலத்தில் நடைபெற்றது. சங்கத்தின் அறிவுரைக்குழுவின் உறுப்பினர்-பிரதிநிதி பேராசிரியர் இரா.அச்சுதன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அறிவிப்புகளை வெளியிடுதல் மற்றும் வேட்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளை அறிவுரைக்குழு உறுப்பினர் இரா.அச்சுதன், மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர்கள் காமராஜ் ஈஸ்வரன், பெருமாள் முத்துராஜ், தெய்வசிகாமணி மற்றும் இரஞ்சித் குமார் ஆகியோர் செய்தனர். தேர்தல் முடிவுகள் சங்கத்தின் மூத்த அறிவுரைக்குழு உறுப்பினர்களான முனைவர்கள் போஜன் கருணாகரன், ஆரோக்கியம் அந்தோணிசாமி, செல்லத்துரை இரத்னசிங், தாமஸ் நேசக்குமார், ஜெபக்குமார் மற்றும் இம்மானுவேல் எடிசன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

 

பின்பு, பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களைக் கொடுத்திருந்தோர், பணிநிறைவுபெறும் தலைவர் முனைவர் இராமசுந்தரம் உள்ளிட்ட ஆளுமைக்குழுவினர், கொரிய புரவலர் திரு யு சே கியொங், திருமதி கிம் உன் சுக், தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் பதிப்பாளரும் எழுத்தாளருமான திரு ஆதனூர் சோழன் மற்றும் பொது ஊடகப் பேச்சாளரும் அரசியல் தலைவருமான திரு காரை செல்வராஜ் உள்ளிட்ட பொதுப்பார்வையாளர்கள் ஆகியோர் தேர்தல் பணிக்குழுவால் அழைக்கப்பட்டு பொது நிகர்நிலை காணொலி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், உரிய அலுவலக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைமுறைகள் தைத்திங்கள் 5-ம் நாளன்று (19 பிப்ரவரி 2023) முழுமையாக நிறைவு பெற்றதன் பேரில் சங்கத்தின் புதிய தலைவர் உள்ளிட்ட தகவல்கள் தற்பொழுது பொதுவெளிக்கு அறியத் தரப்படுகிறது.

 

தலைவராக திருச்சி மாவட்டம், பெருவள்ளப்பூரைச் சேர்ந்த முனைவர் செல்வராஜ் அரவிந்தராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது சுஒன், கொரியா, சுங்கின்வான் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார். துணைத்தலைவராக தஞ்சை மாவட்டம், சாலியமங்கலத்தைச் சேர்ந்த திருமிகு தெட்சிணாமூர்த்தி விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

 

கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த திருமிகு பீட்டர் சகாய டார்சியூஸ் உள்ளக ஆளுமைப்பணியின் செயலாளர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது பக்சுலான் எனும் மென்பொருள் நிறுவனத்தில் (சியோல், கொரியா) ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முனைவர் கோவிந்தராஜ் சரவணன் பொதுச்செயல்பாடுகளின் செயலாளர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கச்சான் பல்கலைக்கழகத்தில் (சொங்னாம், கொரியா) உயிர் நானோ பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

 

சிவகங்கை மாவட்டம், மாங்குடியைச் சேர்ந்த முனைவர் நல்லாள் முத்துசாமி பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சியோல் ஹன்யாங் பல்கலைக்கழக்தில் ஆற்றல் தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இணைப்பொருளாளராக திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த முனைவர் பீட்டர் ஜெரோம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அன்சான் ஹன்யாங் பல்கலைக்கழக்தில் குறைக்கடத்தி தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

 

கொரியாவில் வசித்தவரான சென்னையைச் சேர்ந்த ஆசிரியை சரண்யா பாரதிராஜா, கொரியாவில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மா.சாந்தி பிரின்ஸ், சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த இரா.சுவாமிராஜன் (மென்பொருள் ஆராய்ச்சியாளர், சுஒன், கொரியா) மற்றும் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் வேதபுரி ஹேமநாதன் (இயந்திர பொறியியல் நிபுணர், சுஒன், கொரியா) ஆகியோர் முறையே தாயகத் தொடர்பு, மக்கள் தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் கொரிய புரவலர் இணைப்பு செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

இணைச்செயலாளர் பொறுப்பிற்கு தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த முனைவர் இருதயப்பாண்டி செலஸ்டின் இராஜா (ஆராய்ச்சியாளர், பூசான் பல்கலைக்கழகம், கொரியா.), விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த முனைவர் இராமர் இராஜா மணிகண்டன் (ஆராய்ச்சியாளர், சொங்னம் கச்சான் பல்கலைக்கழகம், கொரியா.), விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகச்சாமி சிவகுமார் (ஆராய்ச்சியாளர், சொங்னம் கச்சான் பல்கலைக்கழகம், கொரியா.), தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த ஆஷிக் இலாஹி (ஆராய்ச்சி மாணவர், உள்சான் தொழில்நுட்ப நிறுவனம், கொரியா.), கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜீவானந்தம் சம்பத் (ஆராய்ச்சி மாணவர், போகாங் பல்கலைக்கழகம், கொரியா.), கடலூர் மாவட்டம், கீழ்காங்கேயன்குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பாரதி (ஆராய்ச்சி மாணவர், யங்னம் பல்கலைக்கழகம், கொரியா.) மற்றும் நீலகிரி மாவட்டம், நந்தட்டியைச் சேர்ந்த திப்பன் மணிகண்டன் (ஆராய்ச்சி மாணவர், பூசான் பல்கலைக்கழகம், கொரியா.) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னையைச் சேர்ந்தவரும் பொறியாளரும் தொழில்முறை சிற்பியுமான சி.தாமோதரன் கொரிய தமிழ்ச் சங்கத்தின் பன்னாட்டு தொடர்பாளராகச் செயல்படுவார். மேலும், சங்கத்தின் தேவைக்கேற்ப பொறுப்பாளர்களை நியமனம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் உரிமை உடையவர் ஆவார். எதிர்வரும் தைத்திங்கள் 29-ம் நாள் (12 பிப்ரவரி 2023) அன்று சியோல் கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கும் தமிழர் திருநாள் - 2023 நிகழ்வில் கொரியவாழ் தமிழ் மக்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமைக்குழுவினர் முறைப்படி பொறுப்பேற்பர். தமிழ் வாழ்க!

 

 

சார்ந்த செய்திகள்