Skip to main content

27 ஆண்டுகளாக மறந்த சீமான்! பள்ளியை சீர் செய்த திமுக பிரமுகர்! 

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

Seaman who has not been seen for 27 years! DMK official who repaired the school!

 

நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் படித்த பள்ளியை, 27 ஆண்டுகளுக்கு பிறகு, சீர்செய்த திமுக பிரமுகரின் செயல் பலதரப்பிலும் பாராட்டைப் பெற்றுவருகிறது.

 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது அரணையூர். இந்த கிராமத்தில், சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 70 ஆண்டு காலமாக, ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளி, கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை பயின்றுள்ளார். மேலும், இப்பள்ளியில் பயின்றவர்கள் பலரும், உயர் அரசு பதவிகளை வகித்துவருகின்றனர். ஆனால், யாரும் இந்தப் பள்ளியை சீர்செய்ய முன்வராததால், அப்பகுதி மக்கள் வேதனையில் இருந்துவந்தனர்.

 

இந்த நிலையில்,  புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சி மன்றத் தலைவி முனிஸ்வரி கணேசன், கிராம மக்களை அழைத்து, கிராமத்தில் பூட்டிக்கிடக்கும் பள்ளியை மீண்டும் திறக்க, பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் விளைவாக, கிராம மக்களின் ஒத்துழைப்போடு, பள்ளியை மீண்டும் திறப்பதற்காக குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை சந்தித்து மீண்டும் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால், 27 ஆண்டு காலமாக, பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கு, அரசு நிதிவழங்க இயலாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதனால் ஏமாற்றமடைந்த கிராம மக்கள் ஒன்றுகூடி, தங்களது நிதியிலேயே பள்ளியை சீர்செய்ய முடிவெடுத்தனர். அதனடிப்படையில், சுமார் 2 லட்சம் ரூபாய் வசூல்செய்து, பள்ளிக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு காத்திருந்த சோதனை, மாணவர் சேர்க்கை. பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கும்போது, அரசுப் பள்ளியில் ஆள் சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும், மனம்தளராத ஊராட்சி மன்றத் தலைவர் முனிஸ்வரி கணேசன், சுற்றியுள்ள கிராமத்து பெற்றோர்களை சந்தித்து, மாணவர்களை மீண்டும் அரசு பள்ளியில் சேர்க்குமாறு வேண்டுகோள் வைத்தார். தற்போது 39 மாணவர்களுடன், பள்ளி மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கிவருகிறது. மேலும், மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பாக, மதிய உணவு ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த தேவையான கழிவறை, சுற்றுச்சுவர் மற்றும் மதிய உணவு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது இக்கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது.


நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் பல அரசு அதிகாரிகளை கொடுத்த கிராமத்துப் பள்ளி இன்று மீண்டும் புன்னகையுடன் மாணவர்களை ஆரத் தழுவிக் கொள்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.