திரைவிமர்சகரும், பத்திரிகையாளருமான பிஸ்மி சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரஜினியின் ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்த்திரைத்துறையில் உச்சநட்சத்திரம் (சூப்பர்ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக்காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் உச்சநட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ரஜினிகாந்த் திரைத்திரையில் உச்சநட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின், தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் உச்சத்தில் இருக்கிறார். இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரைவிமர்சகரும், பத்திரிகையாளருமான சகோதரர் பிஸ்மி அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த ரஜினிகாந்த் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.
ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும் முதிர்ச்சியும் பக்குவமும் தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால், அப்படியானவர்களில் சிலரே, மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று, ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது. இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ரஜினிகாந்தே இதனை விரும்பமாட்டார்கள். இத்தகைய செயல்களானது ரஜினிகாந்த் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.