
கரூரில் இரண்டாவது நாளாக நேற்று பல்வேறு இடங்களில், இரவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை ரோட்டில் இரண்டு இடங்களில் இயங்கி வந்த கொங்கு மெஸ் உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் இரண்டாவது நாளாக நேற்றும் காந்தி கிராமம் பகுதியில் அமைந்துள்ள பிரேம்குமார் - சோபனா தம்பதியர் வீடு, ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் அலுவலகம், பால விநாயகா ப்ளூ மெட்டல் உரிமையாளர் தங்கராஜ் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், நேற்று மாலை இரண்டு இடங்களில் இயங்கி வந்த கொங்கு மெஸ் உணவகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள கணேஷ் முருகன் ட்ரான்ஸ்போர்ட் அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அலுவலகம் என இரண்டு புதிய இடங்கள் உட்பட நான்கு இடங்களில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் இரவிலும் சோதனை தொடர்ந்தது. மூன்றாவது நாளாக நாளையும் சோதனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.