Skip to main content

அரசியல் தலைவர்களின் ‘அடடே’ எளிமை! -அசத்தலான புகைப்படங்கள்!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

 

சாத்தூர் அருகிலுள்ள வெங்கடாசலபுரத்தில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியரிலிருந்து கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும்  நின்றுகொண்டிருக்க,  சோதனை ஓட்ட நிகழ்வினைப் பார்வையிட்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,  ஒரு கையை ஊன்றி,  ஒருக்களித்துத் தரையில் குந்தியபடி,  செம்பைக் கவிழ்த்து தண்ணீர் குடித்தார். 

 

அமைச்சரின் இச்செய்கையைக் கவனித்த ஆளும் கட்சியினர் “எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் எத்தனை எளிமையாக சீவலப்பேரி நீரைச் சுவைத்து சோதித்துப் பார்க்கிறார் அமைச்சர்..” என்று ‘உச்’ கொட்டினார்கள். இதைக்கேட்டு  ஓரிருவர் நமுட்டுச் சிரிப்புச் சிரித்த அந்த நேரத்தில்,  நமது ஆல்பத்தில் இடம்பெற்ற தலைவர்கள் பலரும் மனத்திரையில் விரிந்தனர். 

 

எளிமையை இயல்பாகவே கொண்ட தலைவர்களை நாம் அறிவோம்.  போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காகத் தங்களை எளிமையாகக் காட்டிக்கொள்ளும் தலைவர்களையும் பார்த்திருக்கிறோம்.  யாரையும் விமர்சிப்பது நமது நோக்கம் அல்ல. ஆனாலும், அந்தந்த வேளைகளில், கடமையுணர்வு மேலிடவோ, நல்லவிதத்தில் மக்கள் மனதில் இடம்பெறுவதற்காகவோ, கேமராவில் பதிவாகியிருக்கின்றனர். 

 

‘எல்லோரும் நல்லவரே’ என்னும் பார்வையில் நம் தலைவர்களின் புகைப்படங்களை இங்கே பார்ப்போம்!

 

mgr

 

மாணவர் ஒருவர் 5 மரக்கன்றுகளை நட்டால், அவருக்கு 5 மதிப்பெண் வழங்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாகச் சொன்ன பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், குழி தோண்டி மரக்கன்று நடுவதற்காக மண்வெட்டி பிடித்திருக்கிறார். இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளச் சேதத்தைப் பார்வையிடுவதற்காக வேட்டியை மடித்துக்கட்டியபடி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றிருக்கிறார். 

 

தேசத்தை சுத்தம் செய்வதில் ஆர்வம் காட்டிவரும் பிரதமர் நரேந்திரமோடியும் மண்வெட்டி பிடித்தவர்தான்.  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியோ, வேட்டியை மடித்துக்கட்டி, கழிவு நீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் தூர்வாரி சுத்தம் செய்து, பிரதமரின் பாராட்டைப் பெற்றவராக இருக்கிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, மாதத்தில் ஒருநாள் விவசாயிகளுடன் தங்கியிருந்து குறை கேட்கப்போவதாக அறிவித்தவர். கர்நாடகா முழுவதும் நாற்று நடவுப் பணிகளைத் தொடங்கிவைத்த அவர், மண்டியாவில் சேறும், சகதியுமான வயலில், வேட்டியை மடித்துக் கட்டி, நெல் நாற்றுக்களை இடது கையில் பிடித்தபடி, வலது கையால் நாற்று நட்டார். ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக நடவுப் பணிகளைச் செய்தார். 

 

st

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன்னை விவசாயி என்று பெருமிதத்துடன் கூறுவதோடு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மண்வெட்டி பிடிப்பார்.  கையில் அரிவாளைத் தூக்கிக்கொண்டு, கலிங்கப்பட்டியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றியிருக்கிறார்.  தூர்வாரி மண்ணைத் தலையில் சுமந்திருக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வேட்டியை வரிந்துகட்டி இறங்கியிருக்கிறார். இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே எனச் சொல்லி மக்களோடு மக்களாகப் பயணித்துவிட்டு, தற்போது கிராமங்கள் தோறும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவரும் வேட்டியை மடித்துக் கட்டியிருக்கிறார். சாலையோர டீ கடையில் டீ குடிப்பார். ஆட்டோவில் ஏறி தொண்டர்களைக் குஷிப்படுத்துவார். 

 

r

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவு சாப்பிடுவார். தொண்டர்களோடு சைக்கிள் பயணம் மேற்கொள்வார். பேன்ட்டை ஏற்றிவிட்டு, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறுவார். மக்களோடு இரண்டற கலப்பதில் அலாதி பிரியம் உள்ளவர். 

 

mgr

 

பொது இடங்களில் ஏழை மக்கள் மீது பாசத்தைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆரே. முகம் முழுவதையும் வறுமைக்கோடுகள் ஆக்கிரமித்து அழும் மூதாட்டி ஒருவரை, ஒரு கையில் சோடா இருந்தாலும்,  இரு கரங்களாலும் நெஞ்சோடு அணைத்து, தன் முகத்தை அவர் முகத்தோடு அழுத்தி,  உருக்கத்தை வெளிப்படுத்துகின்ற அந்தப் புகைப்படத்தை எம்.ஜி.ஆரின் இளகிய மனதிற்கு சாட்சியாக வரலாறு பதிவு செய்திருக்கிறது. எம்.ஜி.ஆரும் மண்வெட்டி பிடித்திருக்கிறார். வெள்ளப் பகுதியில் வேட்டியை மடித்துக்கட்டி இறங்கியிருக்கிறார். 

 

j

போராட்டமே வாழ்க்கையாகிப்போன கலைஞரும் ஆடம்பர அரசியல் தலைவர் கிடையாது. வீட்டில் எப்போதும் லுங்கியுடனே காணப்படுவார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நள்ளிரவில் கைது செய்து வீட்டிலிருந்து தூக்கிச்சென்றபோது, சென்னையில் மத்திய சிறைச்சாலை எதிரில் லுங்கியுடன் தரையில் அமர்ந்து, முதுமையிலும் அவர் வெளிப்படுத்திய அந்தப் போர்க்குணம் கலைஞருக்கே உரித்தானது. 

 

ஏழைப் பங்காளர் என்ற வார்த்தைக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட அப்பெருந்தலைவர் மக்கள் மீது காட்டிய பாசம் அசலானது. வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த ஜவஹர்லால் நேரு,  பல நேரங்களில் மகாத்மாவின் கால்மாட்டில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. 

kamaraj

 

மேல் சட்டைகூட அணியாமல், ஒருமுழம் வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு, உலகம் முழுவதும் வலம் வந்தவர் அல்லவா மகாத்மா! எளிமையின் இலக்கணம் என்றால்,  அது நம் தேசப்பிதாதான்!

 

gandhi

 

அரசியல் தலைவர்களின் தோற்றத்தை மட்டுமல்ல.. அவர்கள் இயல்பினையும், புகைப்படங்களின் வாயிலாக, அழகாக பதிவு செய்திருக்கிறது வரலாறு! 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.