Skip to main content

மாணவர்களிடம் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் கேட்ட பள்ளி தாளாளர் கைது: நிதி வசூலிக்க காரணம் என்ன?

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
police


சென்னை பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டையில் ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி கடந்த 1983ஆம் வருடம் முதல் இயங்கி வருகிறது. இந்த இரண்டு பள்ளிகளிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படிக்கின்றனர். 
 

பள்ளியின் தாளாளரான சந்தானம், பள்ளியில் வரும் வருமானத்தைக் கொண்டும், மேலும் சில வங்கிகளில் கடன் பெற்றும் கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்தார். சுமார் 700 கோடிக்கு அவர் கட்டிய அப்பார்ட்மெண்ட்ஸ் சரியாக விற்பனையாகவில்லை. இதனிடையே கடன் கொடுத்த வங்கிகள் பாக்கித் தொகையை கட்ட வேண்டும் என நெருக்கடி கொடுத்தன. 
 

 

 

இந்தநிலையில்தான் வங்கிகளில் வாங்கிய கடனை அடைப்பதற்காக, தனது பள்ளியில் படிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மூலம் அவர்களது பெற்றோருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் சந்தானம். அதில், ஒவ்வொரு மாணவர்களும் தலா இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.
 

இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். யாரும் பணம் கட்ட முன்வராததால் சந்தானம், பள்ளியில் மாணவர்களிடம் மைக்கில் பேசியுள்ளார். அப்போது பணம் கட்ட முன்வராத பெற்றோர்களை அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை பிள்ளைகள் மூலம் அறிந்த பெற்றோர்கள், பீர்க்கன்கரணை காவல்நிலையத்தில் சந்தானம் மீது புகார் அளித்தனர். 
 

புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் இன்று காலை பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் அளிக்கவில்லை. பின்னர் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தானம் மாணவர்களிடம் பணம் கேட்டது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

 

 

இதனிடையே ஒரு சிலர், எங்கள் பிள்ளைகள் ஏரோப்பிளேனில் போக வேண்டும் என்றால், நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றால், நாங்கள் இரண்டு லட்சம் கட்டுவோம், சந்தானம் இருந்தால்தான் அந்த பள்ளியை திறம்பட நடத்துவார், ஆகையால் சந்தானத்தை விடுதலை செய்யுங்கள் என்று காவல்நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.
 

 மாணவர்களிடம் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் கேட்டதும், பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டிருப்பதும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
collector sat on the floor and ate the food with the school students

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அங்குள்ள அரசு பள்ளிகள், மக்கள் நல வாழ்வு மையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வீடு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

பொதுமக்கள் சாலை வசதி சரியில்லை, நல்ல குடிநீர் கிடைப்பதில்லை, சரியான நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. தெரு மின்விளக்கு சரியாக எரிவதில்லை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது குறித்து கோரிக்கை வைத்தனர். அதை எல்லாம் விரைவில் சரி செய்வதாக உறுதியளித்தார். அங்குள்ள மக்கள் நல வாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சை குறித்து கேட்டபோது, அங்கிருந்த கர்ப்பிணிப் பெண்களில் ஒருவர் கலெக்டரிடம் முறையான மருத்துவம் பார்க்கவில்லை என குற்றம்சாட்டினார்.

collector sat on the floor and ate the food with the school students

அங்கிருந்த மருத்துவ செவிலியர்களிடம் வருகை பதிவேடு வாங்கி பார்த்தார், நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை குறித்த முறைகளை கேட்டறிந்து கண்டித்தார். பின்னர் அங்குள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வி குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பைரப்பள்ளி அரசு துவக்க பள்ளி உதவி ஆசிரியை ஜோதி மணியை சால்வை அணிவித்து பாராட்டினார்.

மிட்டாளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து முட்டையுடன் கூடிய சத்துணவு சாப்பிட்டார். மாவட்ட ஆட்சியரிடம் அங்குள்ள இருளர் இன மக்கள், தங்கள் பிள்ளைகள் மேல்நிலைப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படிக்க வசதி இல்லாமல் இருக்கிறோம், எங்கள் பிள்ளைகளுக்கு  கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும், இருக்க சொந்தமாக வீடு இல்லாமல் புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு தங்கியுள்ளோம். அந்த வீடுகளில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவைகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கினார்.