Skip to main content

ஒரே ஒரு மாணவிக்காக இயங்கும் அரசுப்பள்ளி! இதுவும் தமிழ்நாட்டுலதான் நடக்குது!! 

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
s

 

என்னதான் ஆசிரியர்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும், கிராமப்புறங்களில்கூட தனியார் பள்ளிகளுக்கு இருக்கும் மோகம், அரசுப்பள்ளிகள் மீது ஏற்படவில்லை என்பதற்கு இப்போது நாம் சொல்லப்போகும் பள்ளியும் இன்னுமொரு சான்றாக அமையும் எனலாம்.


ஆசிரியர் : மாணவர் விகிதாச்சாரங்களை ஒப்பிடுகையில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் கூட்டம் குறைவு. அதுவும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தற்போது ஒரே ஒரு மாணவியுடன் மட்டுமே இயங்கி வருகிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.


கடந்த 1956ம் ஆண்டில் உதயமானது இந்தப்பள்ளி. ஜோகிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் படிப்புக்காக கைக்கொடுத்தது ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிதான். அப்பள்ளியில் படித்த பலர், இப்போது அரசுத்துறைகளில் பல்வேறு பொறுப்புகளிலும் இருக்கின்றனர். 


ஆனால், இந்தப்பள்ளியின் இன்றைய நிலையோ படுமோசம் என்கிறார்கள் அந்த கிராமத்துக்காரர்கள். காலம் செல்லச்செல்ல, ஆங்கில மோகம் தனியார் பள்ளிகள் மீது ஈர்ப்பை அதிகரிக்க, கழிப்பறை கூட இல்லாத அரசுப்பள்ளிகளை மக்களே புறந்தள்ள தொடங்கினர்.


அதன் விளைவு, பெரிய ஜோகிப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வேகமாக சரியத்தொடங்கியது. கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில், நடப்பு ஆண்டிலோ ஒரே ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு பெயரளவுக்கு இயங்கி வருகிறது.

 

s


பள்ளியை நிர்வகிக்க ஒரு பெண் தலைமை ஆசிரியர், குழந்தைக்கு மதிய உணவு வழங்க ஒரு சத்துணவு ஊழியர் ஆகியோரும் பணியில் உள்ளனர். அந்தக் குழந்தையுடன் சேர்த்து, இப்போதைக்கு மூன்று பேர் மட்டுமே அந்தப் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 


இதுகுறித்து தலைமை ஆசிரியர் ரேகாவிடம் கேட்டபோது, ''கடந்த ஆண்டு இந்தப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தனர். ஆங்கில வழிக்கல்வி மீதுள்ள மோகத்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். கிராம மக்களை ஒருங்கிணைத்து அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு பரப்புரை செய்தும், பெரிதாக பயனளிக்கவில்லை. மாணவி ஸ்ரீலேகா மட்டும் இந்தப் பள்ளியில் தற்போது 4ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளும் தனியாக படிக்க சிரமப்படுகிறாள்,'' என்றார்.


சிறுமி ஸ்ரீலேகாவிடம் கேட்டபோது, ''நான் மட்டும் இந்தப் பள்ளியில் படிக்க கஷ்டமாக இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாடக்கூட பிரண்ட்ஸ் இல்லை. இதனால எனக்கும் பள்ளிக்கூடம் வருவதற்கே பிடிக்கவில்லை,'' என்றாள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.