Skip to main content

அருந்ததியினருக்கான 3% உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும்!

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
Scheduled Castes arunthathiyar 3% Internal Reservation Act

சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் அருந்ததிய மக்களின் அவல வாழ்வை அகற்றிடத் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 2008 ஆம் ஆண்டில் திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் 25.3.2008 அன்று குழு அமைத்தார். அக்குழு வழங்கிய பரிந்துரையின்படி ஆதிதிராவிட மக்களுக்குள் அருந்ததியின மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி; ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 27.11.2008 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

அந்த முடிவின்படி, சட்டம் இயற்ற முனைந்தபோது கலைஞர் உடல்நலம் குன்றி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது. அப்பொழுது  கலைஞரின் அறிவுரைப்படி, தமிழ்நாடு அரசின் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருந்ததியினருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவைப் பேரவையில் 26.2.2009 அன்று அறிமுகம் செய்து நிறைவேற்றினார். 29.4.2009 இல் இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

Scheduled Castes arunthathiyar 3% Internal Reservation Act

இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ஏற்கனவே, அதாவது 2004ஆம் ஆண்டிலேயே உள் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதன் காரணமாக, அருந்ததியினருக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு, பட்டியலின பழங்குடியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை நேற்று (01.08.2024) வழங்கினர். உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை பல்வேறு வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்