Skip to main content

பாலியல் பலாத்கார காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பேஸ்புக் காதலன் மீது வழக்கு...!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
a

 

 

     முகநூல் மூலம் நட்பாகி, நெருக்கமான பெண்ணை மயக்க மருந்துக் கொடுத்துப் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த காதலன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் காரைக்குடி மகளிர் போலீசார்.

 

   சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் ரபீக் முகம்மது. இவரின் மகன் ஆசிக் ரஹ்மான். சமூக வலைத்தளங்களிலேயே பெரும்பான்மையான நேரங்களை கழித்து வந்த இவருக்கு மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டைப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பு முகநூல் மூலம் கிடைத்துள்ளது. தொடக்கத்தில் நட்பாக பழகிய இருவரும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் மொபைலிலும் பேசியுள்ளனர். இதில், " தனக்கு முதலில் திருமணம் நடந்து விதவையானதாகவும், அதன் பின் வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு விவகாரத்தானதாகவும்" அந்தப் பெண் ஆசிக் ரஹ்மானிடம் பகிர்ந்திருக்கின்றார். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிக்ரஹ்மான், " விதவை ஒருவரைத் தான் மணமுடிப்பேன். அது தான் தன்னுடைய விருப்பம் கூட" என தெரிவிக்க, இருவரது உறவும் பலப்பட்டிருக்கின்றது.

 

  இது இப்படியிருக்க, காரைக்குடியிலுள்ள தன்னுடைய வீட்டிற்கே அந்தப் பெண்ணை வரவழைத்த ஆசிக்ரஹ்மான், அந்தப் பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்கமருந்துக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதனை புகைப்படங்களாகவும், வீடியோகவாகவும் எடுத்து தனது மொபைலில் சேமித்து வைத்திருக்கின்றார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் பெண்ணிடம் இந்த பலாத்கார வீடியோவினைக் காட்டியே ஏறக்குறைய 29 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் மற்றும் ஹோண்டா 3G 9419 எண் வாகனத்தையும் பெற்றிருக்கின்றார் அவர். தொடர்ந்து அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்தவண்ணமிருக்க, அந்தப் பெண்ணும் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்ணுடனான பலாத்கார வீடியோவினை வெளியிட்டுள்ளார் அவர். இதனையே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தினர்.

 

சார்ந்த செய்திகள்