Skip to main content

சேலம்: மரத்தில் ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக போலீசுக்கு 'தண்ணீ' காட்டிய சாராய வியாபாரி

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 


சேலத்தில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சாராய வியாபாரி ஒருவர் மரத்தின் மீது ஏறிக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக போக்குக்காட்டிய சம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

t


சேலம் பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (39). இவர் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து, குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தார். டாஸ்மாக் கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும். ஆனால் ராஜசேகரன் தனது சந்துக்கடை மூலம் 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.


கடந்த சில மாதங்களுக்கு முன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வரும் ராஜசேகரை கைது செய்யக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் திடீரென்று பொன்னம்மாபேட்டை ரயில்வேகேட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவருடைய வீட்டில் சோதனை நடத்திய அம்மாபேட்டை காவல்துறையினர், வீட்டில் இருந்து 1200 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை குண்டர் சட்டத்திலும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் ஜாமினில் விடுதலை ஆகி வெளியே வந்த ராஜசேகர், மீண்டும் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அம்மாபேட்டை காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், அவர் சில நாள்களாக தலைமறைவாகிவிட்டார். 


இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை (பிப். 25) அவர் வந்தார். திடீரென்று அவர், சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். மேலும், கையில் 'ஆல்அவுட்' கொசு மருந்து பாட்டிலை வைத்துக்கொண்டு, யாராவது தன்னை பிடிக்க வந்தால் மருந்தைக் குடித்து தற்கொலை செய்வேன் என்றும் மிரட்டினார்.


இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் நகர காவல்துறையினரும், தீயணைப்பு, மீட்புப்படை வீரர்களும் அங்கு வந்தனர். அவரை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் ஏணி வைத்து மரத்தின் மீது ஏறினர். இதைப்பார்த்த ராஜசேகர், கொசு மருந்தை குடித்து விட்டார். பின்னர் காவல்துறையினர், 'உங்கள் மீது வழக்கு எதுவும் போட மாட்டோம். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். கீழே இறங்கி வாருங்கள்,' என்று சமாதானப்படுத்தினர்.


இதையடுத்து ராஜசேகர் மனம் மாறி, ஏணி வழியாக கீழே இறங்கி வந்தார். அப்போது அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டனர். அவர் ஏற்கனவே கொசு மருந்தை குடித்திருந்ததால் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, 'சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சந்துக்கடையில் மதுபானங்களை விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று அவரை விசாரணைக்கு அழைத்தோம். அவரை கைது செய்து விடுவோம் என்ற பயத்தில் இவ்வாறு நாடகம் ஆடுகிறார்,' என்றனர்.


ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள பீரங்கியை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வர இருந்த நிலையில், திடீரென்று சாராய வியாபாரி மரத்தில் ஏறி அலப்பறை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.