Skip to main content

சேலத்தில் அரங்கேறிய தொலைத்தொடர்பு மோசடி; சவுதி வரை நீளும் தொடர்புகள் 

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

salem international calls converted local calls cyber action 

 

சேலத்தில் ஓரிரு இடங்களில் மர்ம நபர்கள், அலைபேசிகளுக்கு வரும் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்து வருவதாக சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை உளவுப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, மாநில உளவுத்துறையினர், சேலம் மாவட்ட கியூ பிரிவினர், கொண்டலாம்பட்டி காவல் துறையினர் ஆகியோர் சேலம் கொண்டலாம்பட்டி செல்வ நகரில் சந்தேகத்திற்கு இடமான ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் கடந்த 13 ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். காவல்துறையினர் சோதனைக்குச் சென்றிருந்தபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த அறையில் 300க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றம் செய்வதற்கான ரிசீவர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், சில உயர் தொழில்நுட்ப அலைபேசிகள் இருந்தன. அவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வாலிபர், வீட்டு உரிமையாளரிடம் கொடுத்த ஆதார் அட்டை, ஊர், பெயர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது. அவர் தனது சொந்த ஊர் பெங்களூரு என்று கூறியுள்ளார். அந்த வாலிபரின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. காவல்துறையினர் விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹைதர் அலி (வயது 40) என்பது தெரிய வந்தது. அதே ஊரைச் சேர்ந்த அமீர் என்பவர் சவுதி அரேபியாவில் உள்ளார் என்றும், அவரிடம் ஹைதர் அலி மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

 

சவுதி அரேபியாவில் இருந்து அமீர், சர்வதேச அழைப்புகளை சேலத்தில் உள்ள ஹைதர் அலிக்கு மாற்றி விடுவதும் இவர் அந்த அழைப்புகளை தமிழ்நாடு வட்டத்திற்கு மாற்றி விடுவதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்ற குற்றச்செயலில் சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒருவரும் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. குறிப்பிட்ட அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கிருந்து 100 சிம் கார்டுகளும், ரிசீவர் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது. அந்த வீட்டில் தங்கியிருந்த நபர்கள் குறித்து விசாரித்த போது அவர்களும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரெஷிதாஸ் முகமது (வயது 28), மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வால் (வயது 33) என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் சோதனை நடத்த வருவதை அறிந்த அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த கும்பல் பயங்கரவாத கும்பலுக்கு உதவும் வகையில் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றினார்களா? இவர்கள் பின்னணியில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? வேறு எந்தெந்த மாநிலத்தில், மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்  என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

இந்த இரண்டு கும்பலுக்கும், சவுதி அரேபியாவில் உள்ள அமீர் தான் மூளையாகச்  செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய இருவரையும் பிடித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தேவைப்படுமானால் இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமை காவல்துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.