பாரதிராஜாவின் இயக்கத்தில் 1983-ல் வெளிவந்த மண்வாசனையில்தான் அறிமுகமானார் ரேவதி. திரைஉலகில் 36 வருடங்களாக நிலைத்து நிற்கும் ரேவதியின் சமீபத்திய திரைப்படம் ஜாக்பாட். அவருடைய உழைப்பு திரையில் மட்டுமல்ல..15 ஆண்டுகளுக்குப் பிறகு மேடையேறி நடனமும் ஆடியிருக்கிறார்.

பரத நாட்டியத்தை தனது ஏழாவது வயதிலேயே பயில ஆரம்பித்தவர் ரேவதி. அவரது நடன அரங்கேற்றம் 1979-ல் நடந்தது. சென்னையிலுள்ள ஸ்ரீசரஸ்வதி கான நிலையத்தில்தான் அவர் நடனம் பயின்றார். அந்த நாட்டியப்பள்ளி காட்டுமன்னார் கோயில் முத்துக்குமாரசாமி பிள்ளையின் சீடரான லலிதாவால் 1939-ல் தொடங்கப்பட்டது. அதன் 80-வது ஆண்டு விழாவில்தான், முன்னாள் மாணவியான ரேவதி, ‘க்ருஷ்ணா நீ பேகன பாரோ’ என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.


“என்னுடைய அம்மாவும் குருவான ரெங்கநாயகி ஜெயராமனும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ‘நீ எவ்ளோ வேணாலும் நடிச்சிக்கோ.. ஆனா.. பரத நாட்டியத்தை விடாதே’ன்னு. ஆனா.. என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியல.” என்கிறார் ரேவதி.
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். மனதையும், உடலையும் செம்மைப்படுத்தக்கூடிய தெய்வீகக்கலை அல்லவா பரதநாட்டியம்! மேடையிலும் ரேவதியின் கலைச்சேவை தொடரட்டும்!