Skip to main content

ஆசன வாயில் பதுக்கிய செல்போன்; ஆய்வில் சிக்கிய கைதி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Salem Central Jail inmate hides cell phone

 

சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் தனது ஆசன வாயில் அலைப்பேசி சாதனத்தை பதுக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.    

 

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள் அலைப்பேசி சாதனம், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள், புகையிலைப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. என்றாலும், சிறைக்காவலர்கள், பாதுகாப்புக்கு அழைத்துச் செல்லும் காவலர்கள் அல்லது அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் மூலமாகத் தடை செய்யப்பட்ட பொருள்கள் கைதிகளுக்கு கைமாற்றப்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. திடீர் சோதனைகள் மூலமாக இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், சேலம் மத்திய சிறை கைதி ஒருவரிடம் மே 24 ஆம் தேதி, ஒரு அலைப்பேசி சாதனம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மத்திய சிறையில் குமரகுரு என்ற விசாரணைக் கைதி அடைக்கப்பட்டுள்ளார். மே 24 ஆம் தேதி காலை 6 மணியளவில், அந்த கைதி ஒரு மாதிரியாக நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடைய நடையில் சந்தேகம் அடைந்த சிறைக் காவலர்கள், அவரை குண்டு கட்டாக ஜெயிலர் அறைக்குத் தூக்கிச் சென்று முழுமையாக சோதனை செய்தனர். அந்தக் கைதியின் ஆசன வாயில் அலைப்பேசியை சொருகி வைத்திருப்பது தெரிய வந்தது.

 

இதுகுறித்து சிறைக் காவலர்கள், ஜெயிலர் மதிவாணனுக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த ஜெயிலர் முன்னிலையில், கைதியின் ஆசன  வாயில் இருந்து அலைப்பேசி சாதனத்தை எடுக்க முயற்சித்தனர். அதில் ஏதும் பலன் கிடைக்காததால் கழிப்பறைக்கு தூக்கிச் சென்று குமரகுருவை முக்கச் செய்தனர். ஏறக்குறைய முக்கால் மணி நேர முயற்சிக்குப் பிறகு குமரகுருவின் ஆசன வாயில் இருந்து அலைப்பேசி சாதனம் வெளியே எடுக்கப்பட்டது. 3 அங்குல நீளம், 1.5 அங்குல அகலமும் உள்ள சிறிய ரக சீனா தயாரிப்பான பழைய பொத்தான் மாடல் அலைப்பேசி சாதனத்தை ஒரு பாலிதீன் பையில் சுற்றி உள்ளே சொருகி  வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், மதுரையைச் சேர்ந்த கொலை வழக்கு கைதி ஒருவர் இந்த அலைப்பேசி சாதனத்தை தன்னிடம் கொடுத்ததாகவும், அதை திருப்பிக் கேட்கும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியதாகவும் கூறியுள்ளார்.

 

அதனால் கடந்த இரு நாள்களாக தனது ஆசன வாயை அலைப்பேசி  வைக்கும் பாதுகாப்பு பெட்டகமாகப் பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குமரகுருவிடம் அலைப்பேசி கொடுத்த   கைதியிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து சிறைக் காவலர்கள் கூறுகையில், ''சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கைதியை ஒரு மாதம் தனி அறையில் அடைக்கப்படுவது வழக்கம். அவருக்கு உறவினர்களைச் சந்தித்துப் பேசவும் தடை  விதிக்கப்படும்'' என்றனர். இதையடுத்து குமரகுருவை சிறைக் காவலர்கள் தனி அறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.