
திருச்சி மாநகரம் ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி பிரேம் கண்ணன்(22). இவர் தொடர்ந்து திருச்சி மாநகரப் பகுதியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்தார். இவரின் தொடர் குற்றத்தை தடுக்கும் பொருட்டு, ஏர்போர்ட் காவல்நிலைய ஆய்வாளர் மூலம், பிரேம் கண்ணன், செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது பிரேம் கண்ணன், ஒரு வருடத்திற்கு எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு வந்தார்.
இந்நிலையில் அவர், மீண்டும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டார். அதன் காரணமாக ஏர்போர்ட் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையில் அவர் நன்னடத்தை உறுதிமொழியை மீறியது தெரியவந்தது. அதன் காரணமாக பிரேம் கண்ணன், நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 278 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பிரேம் கண்ணன் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.