Skip to main content

பொடி நடையாய் நடந்தே அழைத்துச் செல்லப்பட்ட 'ரிவால்டோ'- மிரண்டு மீண்டும் காட்டுக்குள் ஓட்டம்!! 

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

 'Rivaldo' elephant in masinakudi

 

'மசினகுடி' என்ற பெயரை எளிதில் மறந்திருக்க முடியாது. அண்மையில் நீலகிரி மாவட்டம்  மசினகுடியில் காட்டு யானை ஒன்றின் மீது டயரில் தீ வைத்து வீசப்பட்ட மனிதத் தன்மையற்ற செயலால் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மசினகுடியில் காட்டு யானை உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வருவது வழக்கம். 

 

 'Rivaldo' elephant in masinakudi

 

அப்படி உலாவரும் யானைகளில் ஒன்றுதான் 'ரிவால்டோ' யானை. காட்டு யானைகளின் குணாதிசயங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது 'ரிவால்டோ' யானை. மனிதர்களுடன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பழகிய காட்டு யானை ரிவால்டோவுக்கு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணாமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையறிந்த வனத்துறையினர் யானையை முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டனர். யானையை அழைத்துச் செல்வதென்றால், அதிலும் குறிப்பாக காட்டு யானையை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதென்றால் மயக்க ஊசி, கும்கி யானை என அவற்றின் உதவி இல்லாமல் அழைத்துச் செல்வது சாத்தியமற்றது. ஆனால் ரிவால்டோ மனிதனைத் தாக்கும் தன்மையற்ற யானை என்பதாலும், வண்டியில் ஏற்றினால் தும்பிக்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சிரமம் ஏற்படும் என்பதாலும் நடக்க வைத்தே அழைத்துச் செல்ல திட்டமிட்டனர் வனத்துறையினர்.

 

வனத்துறையின் முயற்சிபடி யானை நேற்று (04.02.2021) இரண்டாம் நாளாக 9 கிலோமீட்டர் தூரம் நடந்தது. பழங்கள், தண்ணீர் பாட்டில்களைக் காட்டிக் காட்டி, சின்ன குழந்தையைப்போல ஆசைக் காட்டி வனத்துறையினர் ரிவால்டோவை பொடி நடையாய் நடக்க வைத்து அழைத்து சென்றனர். நேற்று மாலை, தெப்பக்குளம் பகுதிக்குச் செல்லும் தூரத்தில், மொத்தம் 18 கி.மீ, பாதியைக் கடந்தது ரிவால்டோ. 

 

 'Rivaldo' elephant in masinakudi

 

நேற்று இரவு யானையை நிறுத்தி வைத்துவிட்டு, காலையில் பயணத்தை தொடரலாம் என வனத்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில், மாலை 6 மணியளவில் மசினகுடி சோதனைச்சாவடி பகுதியில் வரும்போது, திடீரென ரிவால்டோ யானை மிரண்டு காட்டுக்குள் ஓட்டம் எடுத்தது. வனத்துறையினர் பின்தொடர்ந்தும் தப்பி ஓடிய காட்டு யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “வேறு ஒரு காட்டு யானையின் வாசத்தை அது உணர்ந்ததால் மிரண்டு ஓடியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர். இரவு நேரமானதால் யானையை  தேடும் பணிகள் நிறுத்தப்பட்டது.

 

இன்று காலை மீண்டும் ரிவால்டோவை தேடிப் பிடித்து, அதனை தெப்பக்காடு அழைத்துச் செல்லும் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Udayanidhi's helicopter flying force test

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நீலகிரி வந்திருந்தார். இந்நிலையில் அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.