![Recruitment of youth in DMK is going on vigorously](http://image.nakkheeran.in/cdn/farfuture/HxqbAQkw0X3TMSCmWsLPn8dF9fyf4XUk1J5zXCSIS1s/1718276596/sites/default/files/inline-images/06_47.jpg)
இல்லம் தோறும் இளைஞர் அணி என திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையில் தமிழகம் முழுக்க மிக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஜெ.திருவாசகம் நம்மிடம் கூறும் போது, “தமிழ்நாடு முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் "இல்லந்தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கை தமிழ் நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
அதேபோல் ஈரோட்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு மண்ணில் மாவட்டக் கழக செயலாளர், அமைச்சர் சு.முத்துசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் மண்டலம் 5இன் பொறுப்பாளர், பி.எஸ்.சீனிவாசன் மேற்பார்வையுடன் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக மாவட்ட, மாநகர பகுதியில் உள்ள வட்டக் கழகங்கள் மற்றும் ஒன்றிய பேரூர்களில் உள்ள கிளைக் கழகங்கள் வாரியாக இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை அந்தந்தப் பகுதி செயலாளர்கள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் தலைமையில் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் முன்னிலையில் பாக இளைஞரணி பொறுப்பாளர்களைக் கொண்டு பொறுப்பேற்றுள்ள மாவட்ட, மாநகர துணை அமைப்பாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மேலும் கழகத்தின் ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை கழக செயலாளர்கள் உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்திட தங்களது மேலான ஆதரவைத் தரவேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறினார்.