Skip to main content

தூத்துக்குடி போராட்டத்திற்கு திமுகவே காரணம்: புகைப்படங்களை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018
eps


தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுகவே காரணம் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி மு.க.ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்து இருந்தார்.

இந்தநிலையில், திமுக கொண்டு வர கோரிய ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருப்பதால், ஒத்திவைப்பு தீர்மானம் தேவையில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் திமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தடையை மீறி, சமூக விரோதிகள், சில கட்சிகள், அமைப்புகள், பங்கேற்று அரசுக்கு நெருக்கடி கொடுத்தன. கண்ணீர் புகைக்குண்டு, தடியடி நடத்தியும் கூட்டம் கலையாததால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தூத்துக்கடி மக்கள் உணர்ச்சி வசப்பட்டாலும், யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகக்கூடாது. தூத்துக்குடியில் தொடர்ந்து அமைதி நிலவ மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து முதல்வர் அறிக்கை தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, முதல்வர் அறிக்கையில், துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை இல்லை. தனியார் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவிக்க முதல்வருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டது.

போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். சீரூடை அணியாத போலீசாரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபையை திமுக புறக்கணிப்பதாக கூறினார். தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுகவே காரணம். திமுக ஆட்சியில்தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது. 144 தடை உத்தரவை மீறி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகைப்படங்களை காட்டி முதலமைச்சர் பேசினார்.

தூத்துக்குடி கலவரத்தின் போது அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை பேரவையில் காட்டி பேசினார். அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற புகைப்படங்களை முதலமைச்சர் காட்டினார்.

சார்ந்த செய்திகள்