Skip to main content

“ராமோஜி ராவ் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நிலைத்திருக்கும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
"Ramoji Rao's contributions will live forever" - Chief Minister M.K. Stalin

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87) காலமானார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2024) அதிகாலை 03:45 மணிக்கு உயிரிழந்தார். பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராமோஜி ராவின் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் செய்ய தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.  காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாநில தலைமைச் செயலருக்கு இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார். அதில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட, ரங்காரெட்டி மாவட்ட கலெக்டர் மற்றும் சைபராபாத் கமிஷனருக்கு தலைமைச் செயலர் மூலம் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத் தெலுங்கானா மாநில முதல்வர் அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. 

"Ramoji Rao's contributions will live forever" - Chief Minister M.K. Stalin

அதே சமயம் ராமோஜி ராவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஜி.கிஷன் ரெட்டி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச்சென்றுள்ளார். இத்துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்