Skip to main content

நடுக்கடலில் ஐஸ் பெட்டியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய முதியவர் 

Published on 16/06/2020 | Edited on 16/06/2020
Fishermen

 

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்திலிருந்து கடந்த 13ந் தேதி ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர் (வயது 40), மலர், (வயது 41) கல்லூரி மாணவன் ஆனந்த் (வயது 22) ,ஜேசு (வயது 60) ஆகிய நான்கு பேரும் 2 மாதங்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். மூன்று நாட்களாகியும் கரை திரும்ப வில்லை. 
 

இதனையடுத்து சக மீனவர்கள் தேடிப்பார்த்தும் காணாமல் போன மீனவர்களை மீட்கமுடியவில்லை. இதனால் ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் 16ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும் இரவு கரை திரும்பும் நேரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கியதால் ஆபத்தான நிலையில் ஐஸ் பெட்டியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை கோட்டைபட்டிணம் மீனவர் அபூமன்சூர் மீட்டு முதலுதவி செய்து கோட்டைப்பட்டினம் அழைத்து வந்து கடலோர காவல்படை குழும உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.


அவரை மீட்டு அதிகாரிகள் உடனடியாக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். மேலும் படகில் வந்த மூன்று பேரின் நிலைகுறித்து தகவல் இல்லாததால் உறவினர்களிடையே அச்சம் நீடித்துவருகிறது.


இந்த நிலையில் 3 நாட்களாக உணவு ஏதுமின்றி ஐஸ் பெட்டியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு உயிருடன் மீட்கப்பட்டாலும் அவரால் எதையும் சரியாக சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதனால் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளித்து தொடர்ந்து அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட மனநலப் பிரிவு அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் காணொலி மூலம் ஜேசுவுக்கு மனநல அறிவுறைகள் வழங்கப்பட்ட பிறகு ஓரளவு தெளிவடைந்துள்ளார். அதன் பிறகு தன்னுடன் வந்தவர்கள் கடலில் மூழ்கிவிட்டார்களா என்று தெரியவில்லை என்று மீண்டும் அழுதுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 

 


 

சார்ந்த செய்திகள்