Skip to main content

கனமழையில் சிக்கிய ராமேஸ்வரம்... பாதிக்கப்பட்ட வியாபாரிகள்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

rameshwaram heavy rain peoples happy


வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் காலையில் பெய்த கனமழையினால் பெருமளவில் காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.


அக்னி நட்சத்திரம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாகக் கடுமையாக வெயிலின் தாக்கமும், அனல்காற்றும் வீசி வந்ததால் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் வெளியில் வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதேவேளையில், தமிழகத்தில் நிலவும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணாமாக தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பொழியும் என வானிலை மையம் முன்னறிவிப்பு செய்திருந்தது. 
 

rameshwaram heavy rain peoples happy


அதுபோல், ராமேஸ்வரத்தில் இன்று (12/05/2020) காலை 06:45 மணிக்கு துவங்கிய லேசான மழை சிறிது நேரத்தில் கடும் இடி மின்னலுடன் பலத்த மழையாக மாறி ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகள் முழுவதும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதுடன் தற்காலிகமாக ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கியதால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து காய்கறிகளும் மழைநீரில் மிதந்தது பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இது போல் மீன் மார்க்கெட்டிலும் இந்த நிலை ஏற்பட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு பக்கம் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் திடீரென பெய்த மழையின் காரணமாக கடும் வெப்பம் குறைந்து தீவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.