
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
அதன்படி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுதல், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பது, மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதைக் கண்டித்தும், இதற்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று இலங்கை கடற்படையின் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து காரைக்கால் மீனவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.