
பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார் என்ற இதிகாச நிகழ்வில், கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால் அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டார். இதனை பின்பற்றியே சகோதரத்துவ பாசத்தை உணர்த்தக்கூடிய ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இது வெகுவாக கொண்டாடப்படும்.
ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும். வடமாநிலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற பண்டிகையான ரக்ஷா பந்தன் திருச்சியிலும் கொண்டாடி மகிழப்பட்டது. வட இந்தியர்கள் அதிகளவு வசிக்கும் கம்மாளத்தெருவில் உள்ள ஆண்களுக்கு, பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி சகோதர உறவை புதுப்பித்துக் கொண்டார். சகோதரனாக ஏற்றுக் கொண்ட ஆண்களுக்கு, பெண்கள் திலகமிட்டு, இனிப்பு வழங்கி தங்களது சகோதரத்துவ அன்பை பகிர்ந்து கொண்டனர். கரோனா காலக்கட்டம் என்பதால் வடமாநிலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் செல்ஃபோன் மூலம் தங்களின் சகோதரர்களுடன் ரக்ஷா பந்தன் வாழ்த்து தொிவித்தனர்.