Skip to main content

ஏழு மாவட்ட விவசாயிகள் வளம் பெற இணைப்புக் கால்வாய் திட்டம்!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

kovai

   

 சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களிலுள்ள விவசாயிகளின் வாழ்வு வளம் பெற, இணைப்புக் கால்வாய் திட்டத்தினை செயல்படுத்தக் கோரி காவிரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் வேன் பிரச்சாரப் பயணத்தையும், அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் எழுச்சி மாநாட்டினையும் அறிவித்துள்ளனர்.

 

    தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை 23-7-2018 அன்று நிரம்பியது.  அன்று முதல் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொள்ளிடம் ஆறு வழியாக வீணாக கடலுக்கு செல்கிறது.  அதிகபட்சமாக வினாடிக்கு 2லட்சம் கன அடி தண்ணீர் வரை கடலுக்கு திறந்துவிடப்பட்டது. மணல் கொள்ளை, பராமரிப்பு இல்லாதது காரணமாக முக்கொம்பு அணை 22-8-2018 அன்று உடைந்தது.

 

   காவிரி நீர் சுமார் 100 டி எம் சி க்கு மேல் கடலுக்கு வீணாகச் சென்றுவிட்டது.  காவிரியில் வெள்ளம் வரும் போது வீணாகும்  தண்ணீரை வறட்சியான திருச்சி கரூர் மாவட்டங்களின் ஒரு பகுதிக்கும்  சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் பயன்படுத்தும் திட்டம் 1958ல் உருவானது.  காவிரியில் மாயனூர் கதவணையில் இருந்து 20 மீட்டர் அகலத்திற்கு 258 கி.மீ  தூரம் கால்வாய் வெட்டி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வழியாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் புதுப்பட்டி கிராமத்தில் குண்டாறுடன் இணைக்கப்படும். குண்டாறிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வைப்பாறுடன் இணைக்கப்படுகிறது.

 

இந்தக் கால்வாய் மூலம் 6000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து 10 டி எம் சி கிடைக்கும். இதனால் ஏழு மாவட்டங்களில் உள்ள 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர் உயரும். 75 லட்சம் மக்களுக்கு  குடிநீர் வசதி கிடைக்கும். வறண்ட பகுதி மக்கள் வாழ்வில் புதிய மாற்றம் நம்பிக்கை ஏற்படும். ஆனால், திட்டம் கிடப்பிலேயே இருப்பதால் ஒரு பக்கம் வெள்ளம் கரைபுரண்டு வீணாக கடலுக்கு செல்கிறது. ஏராளமான உயிர் சேதம்,பொருட்சேதம் ஏற்படுகிறது. நமது பகுதியில் மக்கள் குடிக்க தண்ணீரின்றி வாடுகின்றனர். இதனை தடுக்கவும், உடனே இணைப்புக்கால்வாய் திட்டத்தினை நியைவேற்றவும், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு அணையில் இருந்து 18-9-2018 ல் துவங்கி  கரூர் மாயனூர் காவிரி அணை வரை ஒரு வாரம் மக்கள் சந்திப்பு வேன் பிரச்சாரப் பயணத்தினையும், பயணத்தின் முடிவில், அக்டோபர் 8 ல்  புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர் காவிரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Date Notification for Cauvery Management Commission Meeting

கடந்த ஜனவரி 18 ஆம் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதத்தில் வினாடிக்கு ஆயிரத்து 182 கன அடி வீதம் 2.76 டிம்சி தண்ணீரும், பிப்ரவரி மாதத்திற்கு 998 கன அடி வீதம் மொத்தமாக 5.26 டிஎம்சி நீர் கார்நாடக அரசின் சார்பில் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்திற்குப் பிறகு வரும் 1 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

“மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்” - டி.கே.சிவக்குமார்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
 D.K.Sivakumar says All arrangements are ready for construction of Mekeadatu Da

தமிழகத்திற்கும், கர்நாடாகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாக பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெற்று வருகிறது. நேற்று (14-12-23) மேல்சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பா.ஜ.க உறுப்பினர் என்.ரவிக்குமார், மேகதாது திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “நமது நீர், நமது உரிமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாம் போராடுவோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும். 

நமக்கு 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்த திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். மாண்டியா, மைசூரு, பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியாது.

அதனால், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தால் காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதனால், நமக்கும் நெருக்கடியான நிலை வராது. கர்நாடகாவில் இந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமலும், பயிர்களை பாதுகாக்கவும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட்டோம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் பின்பற்றினோம். மேகதாது திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கீழ்மட்டத்திலேயே பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, கர்நாடகா அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய குழுவை டெல்லிக்கு அழைத்து செல்ல கர்நாடகா அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.