Skip to main content

காவல் நிலையத்திலிருந்து காணாமல் போகும் மாட்டு வண்டிகள்! திருடனை பிடித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்! 

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Puthukottai Alangudi police station issue
காவல்நிலையத்தில் இருக்கும் மாட்டு வண்டி

 

விபத்து, திருட்டு மணல், மண், கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு முடியும் வரை காவல் நிலையங்களில் நிறுத்தி பாதுகாப்பது வழக்கம். இப்படி பறிமுதல் செய்யப்படும் மோட்டார் வாகனங்களில் இருந்து பேட்டரி, டயர்கள், சிடி பிளேயர்கள் திருட்டு அதிகமாகவே இருக்கிறது. இதனால் வழக்கு முடிந்து வாகனங்களை எடுக்க வரும் வாகன உரிமையாளர்கள் கண்ணீரோடு செல்லும் நிலை இன்று வரை தொடர்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களே காணாமல் போவது தான் பேரதிர்ச்சி.

 

ஆலங்குடி டி.எஸ்.பி சரகத்திற்குட்பட்ட வடகாடு காவல் நிலையத்தில் பல வருடங்களாக பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் கிடக்கின்றன. இதில் கடந்த 21ம் தேதி நள்ளிரவு 1.50 மணிக்கு காவல் நிலைய வாசலில் கண்காணிப்பு கேமராவுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மாட்டு வண்டியை பக்கத்து கிராமமான கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பச்சை துண்டு போட்ட ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றுள்ளார்.

 

காவல் நிலைய வாசலில் நின்ற மாட்டு வண்டி காணாமல் போனதுகூட தெரியாதது போல மொத்த போலீசாரும் மௌனம் காத்த நிலையில், 22ம் தேதி நாம் மாட்டு வண்டி பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற தகவலை வாட்ஸ் அப் பதிவு மூலம் மாவட்டக் காவல் உயர் அதிகாரிகள் வரை கொண்டு சென்றும்கூட மாலை வரை திருடுபோன மாட்டு வண்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

 

Puthukottai Alangudi police station issue
பெயிண்ட் அகற்றப்பட்டு தோப்பில் நின்ற மாட்டு வண்டி

 

இந்த நிலையில் மாட்டு வண்டி திருடனும் காவல் நிலையத்திற்கே வந்து போலீசாரிடம் பேசிவிட்டு சென்றார். மாலையில் மாட்டு வண்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை படத்துடன் மீண்டும் வாட்ஸ் அப் மூலம் காவல் துறைக்கு தெரியப்படுத்திய பிறகு, இரவு 9 மணிக்கு பிறகு ஆலங்குடி டி.எஸ்.பி சென்று காவல் நிலைய வாசலில் மாயமாகி, தென்னந்தோப்பில் நின்ற வண்டியை இழுத்து வந்தார். அத்தோடு நடவடிக்கை முடிந்தது. 


காவல் நிலைய வாசலில் நின்ற மாட்டு வண்டியை திருடிச் சென்றது குறித்து எந்த வழக்கும் இதுவரை பதிவாகவில்லை. இது குறித்து மேலும் விபரமறிந்த சிலர் கூறும் போது, “மாட்டு வண்டியை சம்பந்தப்பட்ட நபர் திருடிச் செல்லவில்லை. மணல் கடத்தலில் சிக்கியிருக்கும் மாட்டு வண்டிகளை மாதம் 2, 3 வண்டிகளை காவல் நிலையத்திலிருந்து சிலர் குறைந்த விலைக்கு விற்று அந்த நபர் இரவில் இழுத்துச் செல்கிறார். காவல் அதிகாரிக்கு பல நாள் கார் ஓட்டுவதும் இந்த நபர் தான். அதனால் தான் எந்த நடவடிக்கையும் இல்லை. துரிதமாக விசாரணை செய்தால் இதுவரை விற்கப்பட்ட வண்டிகள் எத்தனை யார் விற்பது என்பது தெரியவரும். காவல் துறையினரே சிக்குவார்கள் என்பதால் தான் நடவடிக்கை இல்லை.


காவல் நிலையத்திலிருந்து திருடிச் செல்லும் வண்டிகளுக்கு பழைய பெயிண்டை தேய்த்து அகற்றிவிட்டு புது பெயிண்ட் அடிச்சு ரூ.10 ஆயிரம் வரை விற்கிறார்கள். போனவாரம் திருடப்பட்ட வண்டியிலும் கூட வண்டியில் எழுதியிருந்த பெயர்கள், அதில் இருந்த ஒரு கட்சியினுடைய சின்னம் அழிக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். காவல் நிலையத்திலேயே திருட்டு நடப்பதை கூட கண்டு கொள்ளாத போலீசார் எப்படி பொதுமக்களின் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு. இப்ப மற்ற வண்டிகள் திருடு போகாமல் இருக்க டயர்களில் காற்றை பிடிங்கி இருக்கிறார்கள்.

 

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, ‘இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.