உடல் உறுப்புகள் தானம் கொடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையிலும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்தாலும் அதற்கான மேலும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

இந்த நிலையில் உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையை தக்க வைக்கவும் மேலும் விழிப்புணர்வு எற்படுத்தவுமாக புதுக்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இன்று 17 ந் தேதி காலை புதுக்கோட்டை அரசு பொது அலுவலகங்கள் வளாகத்தில் இருந்து போட்டி தொடங்கியது. போட்டியை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக சுமார் 3 கி.மீ தூரம் சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. நிறைவடைந்த இடத்தில் கலைநிகழ்ச்சி களுடன் பரிசளிப்பும் நடந்தது.
இதில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் அலுவலக ஊழியர்கள், இளைஞர்கள் என்று சுமார் 12 ஆயிரத்து 200 பேர் கலந்த கொண்டனர். ர.ர.க்களும் கட்சிக்கரை வேட்டி, துண்டுகளுடன் கலந்து கொண்டனர். உடல் உறுப்பு தான விழிப்புணர்வுக்காக இத்தனை பேர் கலந்து கொண்டு ஓடியது ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளதாக சாதனைச் சான்றும் உடனே வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்.. உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. இறக்கும் நிலையில் உறுப்புகளை தானம் செய்யும் போது பல உயிர்களை காப்பாற்றலாம். அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுக்கோட்டையில் மாரத்தான் நடத்த திட்டமிட்டோம். 7 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 10 ஆயிரத்தையும் தாண்டி 12370 பேர் கலந்து கொண்டது சிறப்பு.

இது ஆசிய அளவில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த விழிப்புணர்வு இத்துடன் நின்றுவிடாது. மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். உறுப்பு தானம் பெற விரும்பும் நபர்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.