Skip to main content

கஜாவின் பெயரால் உயிர் மரங்கள் கடத்தல்... துணைபோகும் அதிகாரிகள்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

வறட்சி மாவட்டம் புதுக்கோட்டை அதிலும் குடிதண்ணீருக்கே திண்டாடும் பகுதி மணமேல்குடி ஒன்றியம், ஆவுடையார்கோயில் ஒன்றியங்கள். மரங்கள் இன்றி மழையும் இல்லை, மழையின்றி விவசாயமும் இல்லை. வானம்பார்த்த பூமி சுட்டெரிக்கும் கோடை வெயில். அதனால் இளைஞர்களின் முயற்சியால் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

 

puthukottai

 

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி கஜா புயல் தாக்கியதில் மரங்கள் சாய்ந்தது. 50 ஆண்டுகள் பின்னோக்கி போனது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மரங்களை பாதுகாப்பதுடன் புதிய மரக்கன்றுகளை வைத்து வளர்க்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் அதிகாரிகள் துணையோடு உயிராக நிற்கும் மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள்.
 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள கல்லணை கால்வாயில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை அகற்ற நாகுடி அலுவலகத்தில்  ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால், சாய்ந்த மரங்களோடு வினைதீர்த்த கோபாலபுரத்தில் கால்வாய் கரையில் நின்ற கஜாவின் தாக்குதலையே எதிர்கொண்டு உயிராகவும் நேராகவும் நின்ற வாகை மரங்களையும் வெட்டியுள்ளனர். பச்சை மரத்தை ஏன் வெட்டனும் என்று அப்பகுதி விவசாயிகள் கேட்க பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தான் ஏலம் கொடுத்தார் என்று சொல்லிக் கொண்டே மரத்தை வெட்டியவர்கள் அவசரமாக டிராக்டரில் மரத்தை ஏற்றி அப்புறப்படுத்தியுள்ளனர்.

 

puthukottai

 

நாகுடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தென்னரசுவிடம் இது பற்றி நாம் கேட்ட போது, கஜா புயலில் சாயந்த மரங்களை தான் ஏலம் விட்டோம் என்றவரிடம் நேராக நிற்கும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதே என்றோம். இல்ல இல்ல அந்த மரங்களும் சாய்ந்து தான் நின்றது என்றார். நேராக நிற்கும் மரங்களை வெட்டுவது போன்ற படங்கள் அனுப்புகிறேன் என்று அவரது எண்ணுக்கு அனுப்பினால் அந்த படங்களை பார்க்கவே இல்லை.
 

ஒட்டுமொத்த மரங்களையும் இழந்து நிழல் இல்லாமல் கோடை வெயிலை தாங்க முடியாமல் தவிக்கும் மக்கள் புதிய மரங்களை வளர்க்க நினைக்கும்போது, அதிகாரிகளோ இருக்கும் மரங்களை வெட்டலாமா? ஏசியில இருக்கின்ற அதிகாரிக்கா தெரியும் மரத்து நிழலின் அருமை. மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்