
இன்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களை வரிசைப்படுத்தி வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி புகழ்ந்து தள்ளி பேசினார்.
பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது, ''அன்புக்கு இலக்கணமாம் ஆருயிர் உதயநிதி அவர்களே... நீங்கள் நடித்தது ஒரு கல் ஒரு கண்ணாடி. ஆனால் நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது. நீங்கள் நடித்ததோ கெத்து... நீங்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து... எதிரிகளை தங்களது சிரிப்பால் நண்பேன்டா என்று சொல்ல வைக்கும் அன்பன் நீங்கள். உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன்... நிஜத்தில் நீங்கள்தான் மாமனிதன்.. நீங்கள் நிமிர்ந்தபோது தமிழ்நாட்டு இளைஞர்கள் நிமிர்ந்தார்கள். இப்படை வெல்லும் என்றீர்கள்... இப்படைதான் எப்போதும் வெல்லும் என்பதை நித்தமும் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். பொதுவாக எப்போதும் உங்கள் மனசு தான் தங்கம்... சரவணன் இருக்க பயமேன் என்பது நீங்கள் நடித்த படம். உதயநிதி இருக்க பயமேன் என்பது தமிழகத்தின் இளைஞர்களின் எண்ணம். நெஞ்சுக்கு நீதியின் பாத்திரமேற்ற நடிகர் மட்டுமல்ல நீங்கள்... நெஞ்சுக்கு நீதி அடுத்த பாகமாகவே வாழ்கிறீர்கள். மாமன்னன் அடுத்த படம் அல்ல தமிழ்நாட்டின் வருங்கால மாமன்னன் தாங்கள் தான். எங்களின் இதயம் கவர்ந்த உதயமும் நிதியமான இளைஞரணி செயலாளரே உங்களை வணங்குகிறேன்'' என புகழ்ந்து தள்ளினார்.