Skip to main content

ஆதரவற்றோருக்கு அடைக்கலம் அளிக்கும் இளம்பெண்; குவியும் பாராட்டுகள்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

Praise young woman who admitted the destitute and mentally challenged  shelter

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டோரை மீட்டு காப்பகத்தில் சேர்த்து வருகிறார் இளம்பெண் ஒருவர்.

 

பெற்ற பிள்ளைகளால் துரத்தப்பட்ட பல முதியவர்கள் மனநலன் பாதிக்கப்பட்டு தாங்கள் என்ன செய்கிறோம் என்று கூட அறியாது, சாலைகளில் பசியும் பட்டினியுமாக, கிழிந்த அழுக்கடைந்த ஆடைகளோடும், வாரப்படாத தலைமுடிகளோடும் சுற்றித் திரிகின்றனர். இவர்களுக்கு தங்கள் சொந்த ஊர் எது, தாங்கள் யார், தங்கள் உறவினர் யார் என்று தெரியாத அவலம் நிலவுகிறது. மனநலன் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பலர் வக்கிரபுத்தி கொண்ட சிலரால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்று கூட தெரியாமல் அலைந்து திரியும் கொடூரம் நம் கண் முன்னே சாதாரணமாக நிகழ்கிறது.

 

இந்நிலையில், பேராவூரணி அரசு மருத்துவமனை சாலையில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் சாதாரண தையல் தொழிலாளியான இளம்பெண் ஜெயலெட்சுமி, பேராவூரணி பகுதியில் சுற்றித்திரிந்த ஆதரவற்றோர், மனநலன் பாதிக்கப்பட்டோரை மீட்டு அரசு மனநல மருத்துவமனை, ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கும் அறப்பணியை எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறார்.

 

Praise young woman who admitted the destitute and mentally challenged  shelter

 

கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி இதுவரை 2 மாதகாலத்திற்குள் 25க்கும் அதிகமான ஆதரவற்றோரை முதியோர் இல்லத்திலும், 5 பேரை அரசு மனநல மருத்துவமனையிலும் சேர்த்துள்ளார். இவரது சேவைப்பணிக்கு பொதுமக்கள், கடைவீதி வியாபாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து ஜெயலட்சுமி நம்மிடம், “சாதாரண தையல் தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தி வருகிறேன். சாலையோர ஆதரவற்றோரை மீட்டெடுக்கும் "ஆபரேஷன் புதுவாழ்வு" என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நீலகண்ட பிள்ளையார் ஆலயம் என பல இடங்களில் ஆதரவற்ற நிலையில் இருந்தவர்களை பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை ஆய்வாளர், அறநிலையத்துறை அதிகாரிகள், மகாசக்தி அறக்கட்டளை, துளிர் அமைப்பு, ஆலமரத்து விழுதுகள் அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் மீட்டு 19 பேரை அருகே உள்ள நமது இல்லம் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்துள்ளோம். தொடர்ந்து டிசம்பர் 7 ஆம் தேதி ஆறு பேரை காப்பகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளோம். மேலும், மனநலன் பாதிக்கப்பட்ட சிலரை கொண்டுபோய் தஞ்சை மருத்துவமனையில் சேர்த்து வந்தேன். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்பி விடுகின்றனர். 

 

Praise young woman who admitted the destitute and mentally challenged  shelter

 

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கடலுக்குள் குதித்த பட்டுக்கோட்டை பகுதி முதியவர் ஒருவரை மீட்டு காவல்துறை ஒத்துழைப்புடன் அவரது குடும்பத்தில் ஒப்படைத்தேன். குருவிக்கரம்பை பகுதியைச் சேர்ந்த மனநலன் பாதிக்கப்பட்ட ஒருவரை தஞ்சை மருத்துவமனையில் சேர்த்தேன். ஆனால், அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் வெளியே அனுப்பிவிட்டனர். தற்போது மீண்டும் மனபாதிப்பில் கடைத்தெருவில் சுற்றித்திரிகிறார். இப்படியானவர்களை சரியாக பராமரிக்க வேண்டும். தனிநபராக பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகத்திற்கோ, அரசு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறேன். தன்னார்வலர்கள் உதவியாலும், என்னுடைய சொந்த பணத்தைக் கொண்டும், ஆம்புலன்ஸ் மூலம் காப்பகம், மருத்துவமனைக்கு கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பேராவூரணி சீனிவாசா ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் எரிபொருள் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு உதவினர்.

 

பெரும்பாலானோர் குடும்பத்தினர் தொல்லை தாங்காமலேயே வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சிலர் சொத்தை பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பி விடுகின்றனர். ஒரு சிலர் முதியோர் ஓய்வூதியத் தொகை வாங்கும் தினத்தன்று அழைத்துச் சென்று அந்த பணத்தை கைப்பற்றிக் கொண்டு பெற்றோரை திருப்பி அனுப்பி விடுகின்றனர். அதேபோல், பிள்ளைகள் சிலர் பிச்சை எடுக்க சொல்லி அந்த காசை வசூல் செய்வதும் கண்கூடாக தெரிகிறது. சிலர் தாங்கள் யார் என்றே தெரியாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு திரிகின்றனர். இவர்களை எல்லாம் தனி ஒரு நபராக மீட்டெடுப்பதற்கு ஒரு பெண்ணாக பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. அரசும் தொண்டு நிறுவனங்களும் உதவினால் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடியும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்