Published on 02/03/2023 | Edited on 02/03/2023

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரண்டு அறைகளில் 16 மேஜைகளில் நடக்கும் 15 சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பதிவான 392 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகளில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.