Skip to main content

'அரசியல் அங்கீகாரம் கிடைத்தது வரலாற்றில் புத்தெழுச்சி பாய்ச்சல்'-சீமான் மகிழ்ச்சி

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
'Political recognition is a leap forward in history'-Seaman is happy

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை எடுத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகள் பெற்றிருந்ததும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் 'விவசாயி சின்னம்' பறிக்கப்பட்டு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மாநில அங்கீகாரம் கிடைத்தது பெரும் மகிழ்வை தருவதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.2 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு முதன் முதலில் போட்டியிட்ட கட்சி 8 ஆண்டுகளில் மாநில கட்சியாக பரிணமித்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் புத்தெழுச்சி பாய்ச்சல். சின்னம் பறிப்பு, பணம் பலம், அதிகார முறைகேடு என பல அடுக்குமுறைகளைத் தாண்டி பெற்றிருக்கும் வாக்கு என்பது பெரும் ஜனநாயக மறுமலர்ச்சியாகும். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க உறுதி ஏற்போம்' என அக்கட்சி தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்