Skip to main content

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு வலைவிரித்த போலீஸ் எஸ்ஐ! கணவரை தாக்கிய வழக்கில் திடீர் இடமாற்றம்!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
police

 

சேலத்தில், குடும்பத்தகராறு தொடர்பாக புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு காதல் வலைவிரித்த போலீஸ் எஸ்ஐ, பெண்ணின் கணவரை தாக்கி சிறை வைத்த புகாரின்பேரில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.


சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் மலைவாசன். வெள்ளிப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

 

police si

 

இது தொடர்பாக மணிமேகலை பலமுறை அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பம் என்றால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுவது சகஜம் என்றுகூறி போலீசாரும் பலமுறை அவர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். 

 


ஆனால், அடிக்கடி கணவர் மீது புகார் கொடுக்கச் சென்று வந்ததில், மணிமேகலைக்கும் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் கலைசெல்வன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மணிமேகலை புகார் கொடுத்தால், அந்தப் புகார் மீது தானாகவே முன்வந்து கலைசெல்வன் விசாரணை நடத்துவதுபோல் அவருடன் சிரித்துப் பேசி பழகி வந்துள்ளார்.

 


புகார்தாரர் - போலீஸ்காரர் என்ற உறவைத் தாண்டியும், அவர்கள் இருவரும் 'நெருக்கமாக' பழக ஆரம்பித்தனர். இதுகுறித்து அறிந்த மணிமேகலையின் கணவர் மலைவாசன், மனைவியைக் கண்டித்துள்ளார். மனைவியுடனான தொடர்பை விட்டுவிடுமாறு எஸ்ஐயையும் கண்டித்ததுடன், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் செய்து விடுவதாகவும் மலைவாசன் கூறியுள்ளார்.

 


இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும், மலைவாசனை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். கடந்த சில மாதங்களாக மலைவாசன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். கணவர் இல்லாததால், எஸ்ஐ கலைசெல்வன் அடிக்கடி மணிமேகலை வீட்டிற்கே வந்து அவருடன் 'நெருக்கமாக' இருந்துவிட்டுச் சென்று வந்துள்ளார்.

 


இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, மணிமேகலை வீட்டிற்கு வந்த எஸ்ஐ கலைசெல்வன் வீட்டில் இருந்த மணிமேகலையின் மகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், தன் தந்தை மலைவாசனிடம் கூறினார். ஆத்திரம் அடைந்த மலைவாசன், மணிமேகலையின் வீட்டிற்கு இன்று (அக்டோபர் 9, 2018) வந்தார். அப்போது எஸ்ஐ கலைசெல்வனும் அங்கு இருந்துள்ளார். மகளை தாக்கியது குறித்து தன் மனைவியிடமும், எஸ்ஐயிடமும் கேட்டுள்ளார். 

 


இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்ஐ கலைசெல்வன், மலைவாசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் அடைந்தார். மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள்ளேயே ஒரு அறையில் சிறை வைத்தனர். 

 


அவர் ஜன்னல் பக்கமாக எட்டிப்பார்த்து தன்னைக் காப்பாற்றும்படி கூச்சல் போட்டார். அதையறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர். அப்போது வீட்டுக்கு வெளியே எஸ்ஐ கலைசெல்வனும், மலைவாசனும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். மேலும், காயம் அடைந்திருந்த மலைவாசனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 


மலைவாசன் அளித்த புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், எஸ்ஐ கலைசெல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதற்கிடையே, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், அதிரடியாக எஸ்ஐ கலைசெல்வனை அன்னதானப்பட்டியில் இருந்து வீராணம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.