Published on 31/03/2022 | Edited on 31/03/2022
திருச்சி, துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு சாய் தேவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர்கள் வீட்டின் மாடியில் தங்கியிருந்த தனலட்சுமியின் தம்பி தனக்கோடி, தனது அக்கா மற்றும் அக்கா மகன் சாய் தேவை அரிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனலட்சுமி மற்றும் சாய்தேவ் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்சனை காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த துவாக்குடி போலீசார், தப்பி ஓடிய தம்பி தனக்கோடியை தேடி வருகின்றனர்.