Skip to main content

ராக்கெட் ராஜா கொடுத்த அசைன்மெண்ட்; போட்டுக்கொடுத்த காதலி - சுற்றி வளைத்த போலீஸ்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
police has arrested a person associated with the racket raja

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ளது ஆணைகுடி. இப்பகுதியைச் சேர்ந்தவர் பால விவேகானந்தன். இவர் தான் பின் நாட்களில் தன் சமூக கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் எனச் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் ராக்கெட் ராஜாவாக மாறுகிறார். பால விவேகானந்தன் ராக்கெட் வேகத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதால், அவரை ‘ராக்கெட் ராஜா’ என்ற பெயரோடு அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். முதலில் கராத்தே செல்வினுடன் சேர்ந்த, ராக்கெட் ராஜா 1996-ம் ஆண்டு பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் நாட்டு வெடிகுண்டு வீசினார். அதுதான் அவரது முதல் குற்றச் சம்பவம். கராத்தே செல்வின் மறைந்ததும், தன் சமூக ஆதரவாளர்களைத் திரட்டி வெங்கடேச பண்ணையாருடன் சேர்ந்தார்.

அவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு அவரின் தம்பி சுபாஷ் பண்ணையாருடன் சேர்ந்து பழிக்குப் பழியாக நடந்த பல சாதியக் கொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்டார். அதன் பின்னர், சுபாஷ் பண்ணையாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தவருக்கு திடீரென அரசியல் ஆசை ஏற்பட, ‘பனங்காட்டுப்படை’ என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவருடன், எந்நேரமும் சுமார் ஒன்றரை கிலோ நகைகளை மார்பிலும் கழுத்திலும் அணிந்துகொண்டு நகைக்கடையாய் வலம் வந்த ஹரி நாடாரும் சேர்ந்து கொண்டார். ராக்கெட் ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ள  நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை 29ஆம் தேதி நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள சாமித்துரை கொலையில் ராக்கெட் ராஜாவிற்கு தொடர்பு இருப்பதை போலீசார் விசாரணையில் உறுதி செய்தனர்.

இது கொத்தனார் செல்வகுமார் கொலைக்கு காத்திருந்து பழிவாங்க ராக்கெட் ராஜா தரப்பு செய்த கொலை சம்பவம் என கூறப்பட்டது. இதையடுத்து, உஷாரான ராக்கெட் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில், வெளி நாட்டிற்குத் தப்பிச் செல்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த போது நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்தது. 

இந்த நிலையில், 8 மாதத்திற்குப் பின் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் ராக்கெட் ராஜா ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதையடுத்து, தனது சொகுசு காரில்  ஆரவாரத்துடன் ஆதரவாளர்களோடு சிறையிலிருந்து சென்றார். இதற்கிடையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 பாளையங்கோட்டை மத்தியச் சிறையில்  கைதியாக இருந்த முத்து மனோ என்பவரை ஒரு கும்பல்  சிறைக்குள்ளையே கற்களாலும், கம்பிகளாலும் தாக்கி கொலை செய்தது. மூன்றடைப்பு கேங்ஸ்டர் என அழைக்கப்படும் முத்து மனோ தனது சாதிக்காக காதல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்து கொலை மிரட்டல் விடுத்த காரணத்தினால் போலீசார் கைது செய்திருந்தனர். இதன் காரணமாக தான் முத்து மனோ கொலை சம்பவம் நடைபெற்றது என சொல்லப்பட்டது.

அந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்து மனோ ஆதாரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முத்து மனோ கொலை சம்பந்தமாக தாழையூத்தை சேர்ந்த ஜேக்கப், மாடசாமி உள்ளிட்ட ஏழு பேர் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பொழுது பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியிலிருந்த ஜெய்லர், துணை ஜெயிலர், தலைமை வார்டன், சிறை காவலர் உள்ளிட்ட ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், முத்து மனோ சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட ஜேக்கப் பற்றி விசாரணை செய்த போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை கண்டுபிடித்தனர். இதற்கு, ஜேக்கப்பின் மாஜி காதலி போலீசுக்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது. காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சமயத்தில் காதலியிடம் பேசிய ஜேக்கப், ''நான் எப்போதும் ஏன் துப்பாக்கியோட இருக்கிறேன் தெரியுமா டார்லிங்.. ராக்கெட் ராஜா அண்ணன் கொடுத்த அசைன்மெண்ட் ஒன்னு இருக்கு..'' எனக் கூறி நெல்லையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளியை தீர்த்து கட்டும் கதையை கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த ரகசிய தகவலை மாஜி காதலி போலீசுக்கு போட்டுக்கொடுக்க, இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் கொலை செய்யப்பட்ட சாமித்துரை கொலை வழக்கிலும், முத்து மனோ கொலை வழக்கிலும் ஜேக்கப்புக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜேக்கப்பை கடந்த ஜனவரி 25 ஆம் தேதி குமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் வைத்து வள்ளியூர் டி.எஸ்.பி.யோகேஸ்குமார் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் செய்த விசாரணையில், கொலை சம்பவங்களுக்கு எல்லாம் 'வெப்பன் சப்ளையராக' செயல்பட்டது ராக்கெட் ராஜா தான் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஆணைகுடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் வீட்டில் மான் கொம்பு, அரிவாள், துப்பாக்கி, துப்பாக்கியில் மாட்டக்கூடிய பைனாக்குலர் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து, ஜேக்கப்பின் மீது இந்திய ஆயுத தடைச்சட்டம் மற்றும் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற வகையில் கருத்துக்களைப் பதிவிடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாதுகாப்பு காரணமாக ஜேக்கப்பை சென்னை பூந்தமல்லி சப்-ஜெயிலில் அடைத்னர். அதனைத் தொடர்ந்து, பனங்காட்டுப்படை தலைவரும் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து சொகுசு காரில் சுற்றித்திரியும் ராக்கெட் ராஜாவை நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தலைமையிலான இரண்டு தனிப்படையினர் கைது செய்ய தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.