Skip to main content

திருடுபோன நகையைக் கண்டுபிடிக்காத காவல்துறை... பொதுமக்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

The police did not find the stolen jewelry... the family was involved in a dharna with the public!

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது கணவர் சின்னதுரை அரசு அதிகாரியாகப் பணிபுரிந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

 

இந்நிலையில், தனலட்சுமி தனது மூன்று மகள் மற்றும் மகனுடன் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில், மூன்றாவது மகள் ஜெயலட்சுமியின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 110 பவுன் சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்க பணத்தை கடந்த மார்ச் மாதம் 10- ஆம் தேதி பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

 

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையிடம் புகார் அளித்தும் கடந்த ஆறு மாத காலமாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அக்கிராம மக்கள் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து காவல்துறையைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்து அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கிராமப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய வீடுகளில் 110 பவுன் சவரன் தங்க நகை இருக்காது என காவல்துறை அதிகாரிகள் ஏளனமாக நினைப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறை தனிப்படை அமைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற நகைகளை மீட்டு தராவிட்டால், குடும்பத்துடன் விருத்தாச்சலம் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்போம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்