Skip to main content

தேமுதிக அலுவலகம் முன்பு போலீஸ் தடியடி!

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Police baton in front of the Dmdk office!

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, தீவுத்திடலிலிருந்து 2.15 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதி ஊர்வலம் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, விஜயகாந்த் உடல் நல்லடக்க நிகழ்வில் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி;  பொதுமக்களுக்கு அனுமதியில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மா.சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகிய 2 அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயம்பேடு தேமுதிக அலுவலகம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர். மேலும் இறுதி சடங்கில் எங்களையும் அனுமதிக்ககோரி கோரிக்கையும் வைத்துள்ளனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசாரும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும்படி ஒலிபெருக்கியின் மூலம் எச்சரிக்கை செய்தனர். இருப்பினும் அங்கே கலைந்து செல்லாமல் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தவர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறு தடியடி நடத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் தேமுதிக அலுவலத்தின் முன்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்