
ரயிலில் இருந்து தவறி விழுந்த சென்னையைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு. காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை.
சென்னை அண்ணா நகர் குற்றப்பிரிவில் (SSI) சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார் (55). இவர் ரயிலில் திருப்பூரில் இருந்து சென்னை சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் நின்று புறப்பட்ட மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் நடைமேடைக்கு எதிர் திசையில் இருந்து ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது ரயில் புறப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த செந்தில்குமார், ரயில் சக்கரத்தில் சிக்கி தனது இரண்டு கால்களை இழந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.