
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிவராமன் (வயது 32) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவரால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவராமனைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சிவராமனைக் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த கா.அ. சிவராமன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டுள்ளார். இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்.
அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது. நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.