
சேலத்தில், பிளஸ்2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேளாண்மைத்துறை அலுவலர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சிறமியின் தாயார் மீதும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம், சூரமங்கலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். அந்தச் சிறுமி சேலம் சைல்டு லைன் அமைப்பில் ஒரு புகார் அளித்தார். அவருடைய புகார் மனுவில் கூறியிருப்பதாவது; என்னுடைய தாயார் ராஜலட்சுமி. அவரும், என் தந்தையும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழ்கின்றனர். அதன் பிறகு, என் தாயார் பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார்.
ஜெயக்குமார் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இது பற்றி தெரிந்தும் என் தாயார் அவரை கண்டுகொள்ளாமல் உடந்தையாக இருக்கிறார். இதைப்பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர், மாணவியின் புகார் குறித்து சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் தெரிவித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவி புகாரில் கூறியுள்ள ஜெயக்குமார் என்பவர் பெரம்பலூரில் அரசின் வேளாண்மைத்துறையில் அலுவலராக பணியாற்றி வருவது தெரியவந்தது.
அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், இதற்கு உடந்தையாக சிறுமியின் தாயாரும் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமார், ராஜலட்சுமி ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.