Skip to main content

மீன்பிடித் தொழிலிலிருந்தே தமிழர்களை அகற்ற முயற்சிக்கிறது இலங்கை அரசு: வேல்முருகன் கண்டனம்

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
T. Velmurugan



மீன்பிடித் தொழிலிலிருந்தே தமிழர்களை அகற்றும், வரலாறு பார்த்திராத கொடூர சட்டத்தைப் போட்டு, அதன்கீழ் தூத்துக்குடி மீனவர் 8 பேருக்கு தண்டனையும் வழங்கியிருக்கிறது இலங்கை அரசு! இதை அதிமுக அரசும் ஒன்றிய பாஜக அரசும் கண்டுகொள்ளாததுடன், சட்டம் போட்ட இலங்கை ஆட்சியாளரை அழைத்து ஆலோசனையும் நடத்துகிறார் மோடி! சர்வதேச மனித உரிமைக் கோட்பாட்டிற்கு எதிராக, தமிழர்களை அழிப்பதற்கென்றே போட்டிருக்கும் இந்தச் சட்டத்தை ரத்து செய்தாக வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

அண்மையில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னைக் கொல்ல சதி செய்கிறது என்று இலங்கை அமைச்சரவைக் கூட்டத்திலேயே அறிவித்தார் அதிபர் சிறிசேனா. அதன்பின் அவரது அலுவலகமே அந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டது. இந்த சமயத்திலேயே, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தவுள்ள செய்தியும் வெளியானது.
 

இதற்கு இரண்டு நாள் முன்னர்தான், தூத்துக்குடி மீனவர் 8 பேருக்கு இலங்கை அரசு 3 மாத சிறை தண்டனையுடன் தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கண்டனக் குரலை பழனிசாமி அரசும் சரி, மோடி அரசும் சரி, கண்டுகொள்ளவில்லை.
 

இந்த நிலையில்தான், கடந்த புதன்கிழமையன்று பிரதமர் மோடியும் தன்னைக் கொல்ல இந்திய ‘ரா’ சதி செய்கிறது என்று சொன்ன இலங்கை அதிபர் சிறிசேனாவும் தொலைபேசியில் உறவாடி, அதன்பின் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இந்தியா வந்தார். நேற்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடி-ரணில் ஆலோசனை நடந்தது. இரு தரப்பு உறவை வலுப்படுத்த பேச்சு நடத்தினர் என்று செய்தி வெளியானது.
 

ஏற்கனவே இரு நாட்டுக்கும் இடையே நல்லுறவு இருக்கும் நிலையிலும், தமிழக மீனவர்களுக்கெதிராக இலங்கை சட்டம் போட்டிருக்கிறது; உறவை மேலும் வலுப்படுத்துவதென்றால், தமிழக மீனவர்களை அடியோடு அழித்தொழித்துவிடவா என்று கேட்க விரும்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
 

தமிழக மீனவர்களை தமிழர் கடலிலிருந்தே அப்புறப்படுத்துவற்கான தொடக்கம்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது என்பது இன்று நிரூபணமாகிறது. மக்களவைத் தேர்தலின்போது கச்சத்தீவை மீட்பதாகச் சொன்ன பாஜகதான், கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம் என்று பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அன்றிலிருந்து தமிழக மீனவர்களை தொழில் செய்யவிடாமல் இலங்கை கடற்படை விரட்டியடிப்பது தொடர்கிறது.
 

இப்போது 10.10.2018ல் இலங்கை மீன் வளத்துறை 1959/1979ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து, ஐநா மனித உரிமைக் கோட்பாட்டிற்கே எதிரான, மனித குலம் இதுவரை பார்த்திராத கொடிய அழித்தொழிப்புச் சட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது.
 

அந்தச் சட்டத்தை, கடந்த ஆகஸ்ட் 18ந் தேதியே கைது செய்த தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் மீது பாய்ச்சியிருக்கிறது. படகுகளையும் பறிமுதல் செய்து, தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும் 3 மாத சிறை தண்டனையையும் அளித்துள்ளது இலங்கை நீதிமன்றம்.
 

இந்தச் சட்டத்தின்படி 15 மீட்டர் நீள படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ. 50 லட்சமும், 15 முதல் 24 மீட்டர் நீள படகிற்கு ரூ. 2 கோடியும், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீள படகிற்கு ரூ. 10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீள படகிற்கு ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கு அதிகமுள்ள படகிற்கு ரூ.17.5 கோடியும் அபராதம் விதிக்கப்படும். படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வழக்கு ஒரு மாதத்திற்குள் முடித்துவைக்கப்படும். என்னே கொடுமை!

 

 

 

                                                 

இந்தக் காட்டுமிராண்டிச் சட்டம் குறித்து அதிமுக பழனிசாமி அரசும் சரி, ஒன்றிய பாஜக மோடி அரசும் சரி, ஆட்சேபனையே தெரிவிக்கவில்லை; ஏன், கண்டுகொள்ளக்கூட இல்லை.

இதிலிருந்து தெரிவது என்ன? இலங்கையின் கொடூர சட்டத்திற்கு இவர்களும் உடந்தை என்பதுதான். தன்னைக் கொல்ல இந்திய ‘ரா’ சதி செய்கிறது என்று சொன்ன இலங்கை அதிபர் சிறிசேனாவுடனேயே மோடி தொலைபேசியில் உறவாடுகிறார்; இலங்கைப் பிரதமர் ரணில் இந்தியா வந்து, இரு தரப்பு உறவை வலுப்படுத்தப் பேச்சு நடத்துகிறார் என்றால் இதை எப்படிப் புரிந்துகொளவது?

இலங்கை அரசின் இந்தக் கொடூர அழிமாட்டச் சட்டம் சர்வதேச மனித உரிமைக் கோட்பாட்டுக்கே புறம்பானது. ஆகவே இது உலகளாவிய பிரச்சனை. இந்தச் சட்டத்தைச் செய்தவர்களையும் இதற்குத் துணை செய்தவர்களையும் குற்றவாளிகளாக உலக அரங்கில் நிச்சயம் தமிழர்கள் நிறுத்துவார்கள். அதற்கு முன் செய்த பிழை உணர்ந்து அதனை நீக்கிக்கொள்வது அவர்களின் கடமை.

எனவே, தமிழர்களை மீன்பிடித் தொழிலிலிருந்து அகற்றுவது மட்டுமல்ல, அவர்களை அழித்தொழிப்பதற்கென்றே போட்டிருக்கும் இந்தச் சட்டத்தை ரத்து செய்தாக வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசின் அரசாணை சமூகநீதிக்கு எதிரானது! -வேல்முருகன் கண்டனம்!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

T. Velmurugan - TVK PARTY

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், மாநில அரசு நடத்தும் 'செட் தேர்வு, தேசிய தேர்வு முகமை நடத்தும் 'நெட் தேர்வு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.


                        
இந்த நிலையில், இந்த பணியிடங்களை நிரப்பப்படும் போது ஆய்வு படிப்புகளை (பி.ஹெச்.டி.) முடித்தவர்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் என எடப்பாடி அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது உயர்கல்வித்துறை. 


                      
இந்த அரசாணைக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனறர். இது குறித்து கண்டன் தெரிவித்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் , ''முதுகலை மற்றும் எம்.பில் பட்டம் பெற்றுவர்கள், பி.எச்.டி முடித்தவர்கள், இந்த செட், நெட் தேர்வை எழுதலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் வழிகாட்டுதலின்படி,  உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருவது வழக்கமாகும்.


                       
இந்நிலையில் வரும் ஜூலை 1 முதல் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.


  
                   
உயர்கல்வித் துறையின் அரசாணையின் காரணமாக, முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, 'செட்', 'நெட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்று,  உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புக்காக போராடி வரும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.


                        
ஏழை, எளிய மாணவர்கள், முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முடியாத காரியமாகும். அதே போன்று, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பி.எச்.டி., ஆய்வுப் படிப்பைத் தொடருவதற்கு கல்வி நிறுவனங்களில் ஊக்கத்தொகையோ, அல்லது மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையோ அனைவருக்கும் கிடைப்பது இல்லை.


                     
இச்சூழலில், பி.எச்.டி. முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்.    எனவே, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக!

 

 

 

Next Story

வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: வேல்முருகன் அறிவிப்பு! 

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

T. Velmurugan

 

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைஉயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.12.20 அன்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.12.20 அன்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்காக அறிஞர்கள் பலரும் தாங்கள் பெற்ற விருதுகளையும் திருப்பி அளித்து வருகிறார்கள்.


இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறப்போவதில்லை என, மத்திய வேளாண்துறை அமைச்சர்  நரேந்திர சிங் தோமர் திமிராகப் பதிலளித்துள்ளது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் கடந்த 29 நாட்களாகப் பனியிலும், பட்டினியிலும் இரவு பகல் பாராமல் போராடி வரும் நிலையில், மத்திய அமைச்சர் தோமரின் பேச்சு, அரசின் ஆணவத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

 

ஆர்.எஸ்.எஸ்-ன் அறிவுரையின் பெயரில் மோடி, புதிய வேளாண் சட்டங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டத்தினைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு, போராட்டத்திற்குப் பெருகும் ஆதரவினை தடுக்க முடியாததால், நரித்தனமாகப் போராடும் விவசாயிகளின் மீதான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் மீது போர் தொடுத்துள்ள மோடி அரசு, மறுபுறம், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி நாட்டு மக்கள் மீது போரை நிகழ்த்தியுள்ளார்.

 

கடந்த நவம்பர் மாதம் வரை ரூ. 610 -ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது ரூ.710-ஆக உயர்த்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இரு கட்டங்களாக எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் சாமானியர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

 

cnc

 

எரிவாயு விலை உயர்வு ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ரூ.90-ஐ நெருங்கிவிட்டது பெட்ரோல் விலை. பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு நேரடியாக, நாட்டு மக்களைப் பாதிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரியைக் குறைக்காமல், பாஜக அரசு உயர்த்தியே வந்துள்ளது. இதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு சிலிண்டர் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

 

எனவே, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 26.12.2020 அன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கு, பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.