Skip to main content

காபி தூள் இல்லமால் எப்படி காபி போடமுடியும்;பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் அமைச்சர் பேச்சு!!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018

 

 

பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக,பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது பல்லாயிர கணக்கானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த போராட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழியாக மனு கொடுக்கவிருக்கிறது பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு. இன்று (21-12-2018) தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முழு கடை அடைப்பு செய்கிறது சிவகாசி வர்த்தகர்கள் சங்கம். 

 

protest


‘பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்ட விதியை மாற்றி, புதிய விதியை ஏற்படுத்தும் அதிகாரம், அரசியல் சாசனத்தில் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்படவில்லை.’ என்பதைச் சுட்டிக்காட்டி, ‘பசுமைப் பட்டாசுகள் அல்லது குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும்; விற்பனை செய்யப்பட வேண்டும்.’ என்ற உத்தரவானது, ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் முடக்கிப்போட்டு, சிவகாசியில் அனைத்துப் பட்டாசு ஆலைகளையும் மூட வைத்துவிட்டது. தமிழக அரசு,  பட்டாசுக்குத் தனிப்பட்ட விலக்களிப்பதற்கு மத்திய அரசினை வலியுறுத்தித் தீர்வு காண வேண்டும். அதற்கான வரைவினை தமிழக சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் கோரிக்கையாக உள்ளது.

 

protest

 

விருதுநகரில் உள்ள 1070 பாட்டாசு ஆலைகளிலிருந்தும் பேருந்துகள் மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். கடந்த நவம்பர் 13 ஆம் தேதியிலிருந்து பட்டாசு ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. பட்டாசு தொழிலையே நம்பியிருந்த மக்கள் வேலையிழந்ததால் உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வேறு வேலைக்கும் செல்லமுடியாத நிலையில் உள்ளனர். பேரியம் நைட்ரேட் எனப்படும் பச்சை உப்பு இல்லாத பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் ஒளி செறிவை வெளிப்படுத்தும் பேரியம் நைட்ரேட் இல்லாமால் எப்படி பட்டாசு தயாரிக்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

 

protest

 

இந்த சூழலில் இந்த போராட்டமானது இந்திய அளவிற்கு கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என லட்சம் பேரை திரட்ட வேண்டும் என முடிவெடுத்த போராட்ட குழு, மக்களை திரட்டி இந்த மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது பெரும் மக்கள் போராட்டமாக இந்த போராட்டம் மாறியுள்ளது. இந்நிலையில் போராட்ட களத்தில் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் ராஜேந்திர பேசுகையில், நானும் ஒரு தொழிலாளிதான், சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலை முதல் பிரின்டிங் தொழிற்சாலை வரை அனைத்திலும் வேலை செய்துள்ளேன். உங்களின் நிலை எனக்கு தெரியும். காபி தூள் இல்லாமல் எப்படி காபி போட முடியும். முடியாது  அதேபோல் பேரியம் நைட்ரேட் இல்லாமல் எப்படி பட்டாசு தயாரிக்க முடியும்.  சில விஷயங்கள் இருக்கு ஆனால் அவைகளை மீடியா முன்பு சொல்லமுடியாது (பண பேரமாக இருக்குமோ) சட்ட விவகாரங்கள் இருக்கு அதை பொதுவெளியில் பேசக்கூடாது. ஆனால் இது சம்பந்தமாக முயற்சிகள் எடுத்து பட்டாசு ஆலைகளை கூடிய விரைவில் திறந்தே தீருவோம் என கூறினார்.

 

protest

 

தோழர் நல்லக்கண்ணு, காங்கிரசை சேர்ந்த ராஜா சொக்கன் மற்றும் பல கட்சிகளை சேர்ந்தவர்களும் மக்கள் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். இதுபற்றி தோழர் நல்லகண்ணு கூறும்போது, நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை திறக்கபோகும் அரசு ஏன் பட்டாசு ஆலைகளை மட்டும் நசுக்குகிறார்கள் என கூறினார்.  

 

 

போராட்டத்தில் இறங்கியுள்ள பாட்டசு தொழிலாளியான சவுந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், சாப்பாட்டிற்கே நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். இந்த தொழில் போனால் அடுத்தவனிடன் பணத்தை புடுங்க வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது. பட்டாசு தொழில் இல்லாமல் இங்கு ஒன்றும் இல்லை. அச்சு தொழில் கூட பட்டாசு ஆலையை நம்பிதான் இருக்கிறது. வெளியூருக்கு சென்று வேலைபார்க்க எல்லாராலும் முடியாது. தற்போது இங்கு தொழில் இன்றி வாடும் யாராவது வழிப்பறியில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த களங்கமும் சிவகாசிக்குத்தான். அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உலகமே வியந்து பார்த்த சிவகாசி இன்று ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது என கூறினார்.

 

protest

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர்  தேனி வசந்தன் அமைச்சர் உரையாற்றிய பிறகு மைக்கை பிடித்து மக்கள் முன் பேசுகையில், ஆளும் மத்திய,மாநில அரசுகளுக்கு முன்னவே தெரியாதா? மக்கள் 45 நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் என பேச ஆரம்பிக்க  அமைச்சருடன் வந்த சிலர் அரசியல் பேச வேண்டாம் எனக் கூறி அவரை அமர வைத்தனர்.

 

protest

 

தற்போது போராட்டத்தில் குவியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களை களைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். சம்பந்தமில்லாத சில கூட்டமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக உளவுத்துறை சந்தேகிக்க, பிரச்சனை வரக்கூடாது என போலீசார் மக்களை, குறிப்பாக பெண்களை களைந்துபோக அறிவுறுத்தியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் ஆலைகள் திறக்கப்பட பேச்சு வார்த்தை நடந்து வருவதால் மக்களை களைய சொல்லி போராட்ட குழு கூறிய நிலையிலும் மக்கள் தொடர் போராட்டத்தில் உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.